வி.சி.க-வின் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு கட்டுக்கடங்காத கூட்டத்தால் பாதியிலேயே கைவிடப்பட்டதும், அந்தக் கூட்டநெரிசலுக்கு மத்தியிலும் ‘த.வெ.க-வுடன் இணைந்து பயணிப்போம்’ என திருமா அறிவித்திருப்பதும் பெரும் பேசுபொருளாகியிருக்கிறது!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் பிறந்தநாளான ஆகஸ்ட் 17-ம் தேதி, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டை ஒருங்கிணைக்க முடிவெடுத்தது, அக்கட்சித் தலைமை. மாநாடு சிறப்பான ஒருங்கிணைப்புடன் நடக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாடு முழுக்கப் பயணித்து கலந்தாய்வுக் கூட்டங்களை நடத்தியிருந்தார், திருமாவளவன். மாநாட்டுத் திடலுக்குப் பெருங்கூட்டம் வந்தபோதிலும் முறையான ஒருங்கிணைப்பு இல்லாததாலும், மேடையைச் சுற்றி பாதுகாப்பு இல்லாததாலும் மாநாடு பாதியிலேயே கைவிடப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய வி.சி.க சீனியர்கள், “எங்கள் கட்சியின் மாநாடுக்கு எப்போதுமே ஒரு தனிச்சிறப்பு உண்டு. நாங்கள் அதிகாரத்திலோ… பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பிரதிநிதிகளையோ கொண்டிருக்கவில்லை என்றாலும், நாங்கள் நடத்தும் மாநாடுகள் ஆளுங்கட்சிக்கே சவால்விடும் அளவுக்கு இருந்திருக்கின்றன. 2024-ல் அ.தி.மு.க பொன்விழா மாநாடு, தி.மு.க-வின் இளைஞரணி மாநாடு, வி.சி.க-வின் வெல்லும் ஜனநாயகம் மாநாடுகள் நடந்தன. எந்த மாநாட்டுக்குப் பெரும் கூட்டமும் இளைஞர்களின் ஆர்பரிப்பும் இருந்தன என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அப்படியொரு பெயர்பெற்ற வி.சி.க, தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டை மொத்தமாகச் சொதப்பிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்” என்றனர்.

தொடர்ந்து பேசிய அவர்கள், “மாநாட்டு மேடையிலிருந்து தொண்டர்கள் அமர்ந்திருக்கும் திடலுக்கு இடையே மிகப் பெரும் இடைவெளி விடப்பட்டது. அங்கே வி.பி.ஐ-க்கள் அமர வைப்பதுதான் வழக்கம். ஆனால், அனைத்து மாவட்டச் செயலாளர்களையும், மாநிலப் பொறுப்பாளர்களையும் அமர வைக்க வேண்டும் என விரும்பியதால் 300-க்கும் மேற்பட்டோர் மேடையில் அமர வேண்டிய சூழல் ஏற்பட்டது. தொண்டர்கள் அமரும் திடலுக்கும் மேடைக்கும் இடைவெளி எதுவும் விடப்பட்டவில்லை. தலைவர் தொண்டர்களை அருகே சென்று சந்திக்கும் வகையில் 700 மீட்டருக்கு ரேம்ப் அமைக்கப்பட்டிருந்தது. அந்த ரேம்ப் வழியாகத்தான் தொண்டர்கள் மேடையை நோக்கி வர ஆரம்பித்தனர்.
மதியம் 12 மணிக்கெல்லாம் வி.சி.க தொண்டர்கள் திடலுக்கு வரத் தொடங்கினர். பிறகு 3.30 மணிக்கு தலைவர் மேடையேறினார். அதுவரைக்கும் அமைதியாக இருந்த தொண்டர்கள், தலைவர் மேடையேறியதும் மேடையை நோக்கி நகர்ந்தனர். 4.15 வரைக்கும் பவுன்சர்களும் காவல்துறையும் கூட்டத்தை கட்டுப்படுத்தினர். ஆனால் ஒரு கட்டத்துக்குப் பிறகு காவல்துறை மாநாட்டு திடலைவிட்டே கிளம்பிவிட்டனர். 4.45 மணிக்கு மொத்த கூட்டமும் மேடைக்கு ஏறத் தொடங்கிவிட்டது. மேடையிலிருந்து இரண்டாம் கட்ட தலைவர்கள் உயிர்பிழைத்தால் போதுமென மேடையைவிட்டு இறங்கிவிட்டோம். நிலைமை மேலும் மோசமடைந்து தலைவர் திருமாவளவன் பேச முடியாதபடி கூட்டம் அவரை நெருக்கியது. ஆகையால் ஒன்றரை மணி நேரம் பேச திட்டமிட்டிருந்த தலைவர் 5 நிமிடங்களில் பேச்சை முடித்துக் கொண்டார். அவரைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்குள் பெரும் பதற்றமே ஏற்பட்டுவிட்டது.

‘மாநாட்டுக்கு அதிகளவில் கூட்டம் வந்தது’ எனப் பெருமையாகச் சொல்லிக் கொண்டாலும் எங்கள் தொண்டர்களிடம் ஒரு ஒழுங்கு இல்லாததும், தலைமை நிர்வாகிகளிடம் ஒருங்கிணைப்பு திறன் இல்லாததும் பெரும் வேதனையளிக்கிறது. சொல்லப்போனால், உயிர்பிழைத்துதான் மாநாட்டு திடலை விட்டு வெளியே வந்தோம். கூடுதலாக 10 நிமிடங்கள் எங்கள் தலைவர் பேசியிருந்தாலும் நிலைமை மோசமாகியிருக்கும்” என்றனர்.
நம்மிடம் பேசிய அரசியல் நோக்கர்களோ, “கரூர் நெரிசல் சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியதோடு இன்றளவிலும் பேசுபொருளாகவே இருந்துவரும் நிலையிலும், விடுதலை சிறுத்தைகள் மாநாட்டை த.வெ.க காவல்துறை மிகுந்த மெத்தனப் போக்குடன் அணுகியிருக்கிறது. த.வெ.க அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கிறார் வன்னி அரசு. கட்சியின் தலைவராகவும் எம்.பி-யாகவும் இருக்கிறார் திருமாவளவன்.

வன்னி அரசையும் திருமாவையும் கூட்டம் நெருக்கும்போது ஒரு காவல்துறை அதிகாரியும் அங்கு இல்லை. தொண்டர்கள் மேடையேறாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பும் காவல்துறைக்கு உண்டு. ஆனால் மொத்தமாக கோட்டைவிட்டிருக்கிறார்கள். இந்தக் களேபரத்துக்கு மத்தியில், ‘த.வெ.க-வுடன் இணைந்து பயணிப்போம்’ என அறிவித்திருக்கிறார் திருமாவளவன். தி.மு.க கூட்டணியில் இருக்கும்போது வி.சி.க மாநாட்டுக்கு ஸ்டாலின் பங்கேற்றார். ஆனால் தற்போது த.வெ.க சார்பில் ஒருவர்கூட பங்கேற்கவில்லை. இருந்தாலும் கூட்டணி எந்தளவுக்கு ஜெல் ஆகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்றனர்.




