சென்னை ஆர்.கே. நகரில் நடைபெற்ற தவெக-வின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “மேயர் பிரியா, நமது சகோதரி பல்லவிக்கு ஒரு மெழுகுவர்த்தியைக் கூட கொடுக்காமல் அவமானப்படுத்தியிருக்கிறார்.
இப்போது உதயநிதி ஸ்டாலினுக்கு ஒரு சவால் விடுகிறேன். இன்னும் 8 மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் வரவிருக்கிறது. இதில் 25-ல் 1 மேயர் இடத்தையாவது வென்று காட்டுங்கள்” எனப் பேசியிருந்தார்.
இதற்கு திமுக-வைச் சேர்ந்த பலரும் ஆதவ் அர்ஜுனாவுக்குப் பதில் கொடுத்து வருகிறார்கள்.
இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, “ஸ்டாலினுக்கோ, உதயநிதி ஸ்டாலினுக்கோ சவால் விடும் தகுதி ஆதவ் அர்ஜுனாவுக்குக் கிடையாது.
ஒரு இடத்திலாவது ஜெயிக்க முடியுமா என ஆதவ் அர்ஜுனா கேட்கிறார். அவர் வரலாறு தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார்.
1984-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, 1986-ஆம் ஆண்டில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.

அதில் 102 நகராட்சிகளில், 90 நகராட்சிகளில் எங்களுடைய கூட்டணி வெற்றி பெற்றது. அதில் நானும் வெற்றி பெற்றிருந்தேன்.
மக்கள் இப்போதே, தெரியாமல் தவெக-வுக்கு வாக்குச் செலுத்திவிட்டோம் எனப் பேசத் தொடங்கிவிட்டனர்.
முடிந்தால் ஆறு மாதத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துங்கள். ஒரு மேயர் பதவியையாவது தவெக வென்றால், நான் ஒரு பக்க மீசையை எடுத்துக் கொள்கிறேன்” எனக் கூறியிருக்கிறார்.




