ஈரான் போர் காரணமாக இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெருமளவு நஷ்டத்தைச் சந்தித்தன. இதை ஈடு செய்ய மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது.
இப்போது சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு கிட்டத்தட்ட ரூ.107-க்கும், டீசல் ஒரு லிட்டருக்கு கிட்டத்தட்ட ரூ.99-க்கும் விற்பனையாகி வருகிறது.
இந்த நேரத்தில், சென்னையில் பெட்ரோல், டீசல் விலை எப்போது மீண்டும் குறையும் என்கிற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இது குறித்து நேற்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி விளக்கம் அளித்துள்ளார்…
“சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வைக் கடந்த காலங்களில் நமது பட்ஜெட்டும், நாட்டின் நிதித் துறையும்தான் தாங்கிக்கொண்டன.
அதனால், இனிமேலும் விலை உயர்வு இருக்காது என்பதை முதலில் தெளிவுபடுத்திவிடுகிறேன்.
இப்போது நீங்கள் கேட்கும், பலரின் மனதிலும் இருக்கும் ஒரு நியாயமான கேள்வி என்னவென்றால், “கச்சா எண்ணெய் விலை குறைந்த பிறகும், இங்கு பெட்ரோல், டீசல் விலைகள் எப்போதுதான் குறையும்?” என்பதுதான்.
நாம் இன்று பெட்ரோல் பங்குகளில் வாங்கும் எரிபொருளானது, கிட்டத்தட்ட 6 வாரங்கள் அல்லது 2 முதல் 3 மாதங்களுக்கு முன்பே சர்வதேச சந்தையிலிருந்து வாங்கப்பட்ட கச்சா எண்ணெயாகும்.
அன்றைய தேதியில் கச்சா எண்ணெயின் விலை, காப்பீட்டுத் தொகை, கப்பல் போக்குவரத்துச் செலவு ஆகியவை அதிகமாக இருந்தன.
அதன்பிறகுதான் சுத்திகரிப்புச் செலவு, மத்திய அரசின் கலால் வரி, மாநில அரசின் வாட் வரி மற்றும் டீலர்களுக்கான கமிஷன் ஆகியவை இதில் சேர்க்கப்படுகின்றன.
எனவே, சர்வதேச சந்தையில் தற்போது கச்சா எண்ணெய் விலை 70 டாலருக்கும் கீழ் சரிந்திருந்தாலும், இந்த மலிவான விலையிலான எண்ணெய் இந்தியாவிற்கு வந்து சேர இன்னும் சில வாரங்கள் ஆகும். அதுவரை நாம் காத்திருக்கத்தான் வேண்டும்”.




