முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
அவரது கைதுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்கள் பணியில் ஈடுபட்டு இருந்தவரை, அவசர அவசரமாக கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது?
சினிமா ஆக்ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்! ஆணவம் அழிவிற்கு வழி” என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும் இதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
“அனிதா ராதாகிருஷ்ணனைக் கைதுசெய்தது தவெக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை. ஜெயலலிதா காலத்தில் என் மீது 16 அவதூறு வழக்குகள் போட்டும்கூட என்னைக் கைது செய்யவில்லை. ஒருவரை விமர்சித்து பேசியதற்காக கைது செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.

மு.க.ஸ்டாலின், உதயநிதியை அவதூறாகப் பேசிய ஆதவ் அர்ஜுனாவை கைதுசெய்வார்களா? இந்தக் கைது சர்வாதிகாரத்தின் உச்சம். இதை சட்டரீதியாக சந்திப்போம். அராஜகத்தை முடிவுக்கு கொண்டுவருவோம். திமுக ஆட்சியில் அவதூறு வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.




