‘மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம்’ என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது தமிழ்நாட்டில் பெரும் விவாவதப் பொருளாகியிருக்கிறது.
இதையடுத்து இந்தித் திணிப்புக்கு எதிராகவும், தமிழ்நாட்டுக்கான நிதியை வழங்க வேண்டும் என்றும் ‘தி.மு.க’ மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. மத்திய அரசின் இந்த இந்தித் திணிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழ்நாட்டில் பெரும் எதிர்ப்பு அலை கிளம்பியிருக்கிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் மும்மொழிக் கொள்கைக்கு எதிராகத் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் ‘த.வெ.க’ தலைவர் விஜய், மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையையும், இந்தித் திணிப்பையும் கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். திருமாவளவன், சீமான் உள்ளிட்ட பலரும் மும்மொழிக் கொள்கையை எதிர்த்துப் பேசி கருத்துத் தெரிவித்து வந்தனர்.
திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, திமுகவினரைப் போலவே இரட்டை வேடம் போடுபவர்கள் வரிசையில், அண்ணன் திரு. திருமாவளவன் இருக்க மாட்டார் என்று நினைத்திருந்தேன். ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.
சென்னை வேளச்சேரியில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைக் கொண்டு செயல்படும் Blue Star Secondary School என்ற… https://t.co/X8EGTAuSjI pic.twitter.com/6EuqlnvPG1— K.Annamalai (@annamalai_k) February 20, 2025
இதையடுத்து தமிழக ‘பா.ஜ.க’ தலைவர் அண்ணாமலை, இந்தித் திணிப்பு, மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்த விஜய், திருமாவளவன் ஆகிய இருவரும் தனியாகப் பள்ளி நடத்துகிறார்கள். அவர்கள் பள்ளியில் இந்தி கற்பிக்கப்படுகிறது என்று குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும், அண்ணாமலை இன்று காலை எக்ஸ் தளத்தில், “திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, திமுகவினரைப் போலவே இரட்டை வேடம் போடுபவர்கள் வரிசையில், அண்ணன் திருமாவளவன் இருக்க மாட்டார் என்று நினைத்திருந்தேன். ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. சென்னை வேளச்சேரியில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைக் கொண்டு செயல்படும் ‘Blue Star Secondary School’ என்ற பள்ளியின் நிர்வாகக் குழு தலைவர், அண்ணன் திரு. திருமாவளவன் தான்” என்று விமர்சித்திருந்தார்.
இதற்குப் பதிலளித்திருக்கும் ‘வி.சி.க’ தலைவர் திருமாவளவன் “நான் சிபிஎஸ்இ பள்ளி நடத்தவில்லை. அந்த இடம் எங்களுடையது என்பதால் என் பெயரைப் பயன்படுத்துகிறார்கள். இன்னும் அந்த பள்ளி செயல்படவே இல்லை. ஒரே ஒரு மாணவர் கூட சேராத பள்ளியில் மும்மொழி கட்டாயமாக வைத்துள்ளதாக, ஊடக விமர்சனத்திற்காக அண்ணாமலை பேசி வருகிறார்” கூறியிருக்கிறார்.