தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தராஜன் தூத்துக்குடியில் இன்று (மே. 25) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.
விசிக குறித்தும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி., மாணிக்கம் தாகூர் குறித்தும் பேசிய தமிழிசை சௌந்தராஜன், “விசிக, திமுக, கம்யூனிஸ்டுகள் எல்லோரும் அவர்கள் கையை வைத்தே குத்திக்கொள்கிறார்கள்.
விசிக, பாஜகவை இணைத்து, இணைத்து பேசித்தான் அரசியல் செய்தார்கள். திருமா விஜய்யை கொள்கை எதிரி என்றுதான் சொல்லிக்கொண்டிருந்தார்.
ஆர்எஸ்எஸ் பிள்ளை என்று விஜய்யைச் சொன்னார். ஆனால் இன்று அவர்களோடு இணைந்து ஆட்சி அமைத்திருக்கிறீர்கள்.
அவர்கள் கட்சியைச் சார்ந்தவர்களுக்கே அரசவையில் பங்கு கொண்டது பிடிக்கவில்லை. அதுவும் திருமாவளவனே சொல்கிறார் எனக்கே பிடிக்கவில்லை என்று… அப்படி ஆட்சி அதிகாரத்தில் ஆசை இல்லை என்றால் வெளியில் இருந்து ஆதரவு தெரிவிக்க வேண்டியது தானே…
இந்த அரசாங்கம் தினமும் ஆட்டம் காண்கிற அரசாங்கமாகத்தான் இருக்கபோகிறதோ என்ற அச்சம் எங்களுக்கு இருக்கிறது. மாணிக்கம் தாகூருக்கு எனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துகொள்கிறேன்.
உங்களுக்கு இருக்கும் பதவி ஆசையால் பின் வாசல் வழியாக ஓடிப்போய் பதவியில் ஒட்டிக்கொண்டீர்கள் என்பதை ஒப்புக்கொள்ளுங்கள்.

காங்கிரஸ் தனித்து நின்று வெற்றி பெற்று அமைச்சராவதற்கு உலகம் இருக்கும் வரை வாய்ப்பில்லை. திமுக தோளில் ஏறி வெற்றி பெற்றுவிட்டு, அதிமுகவும் திமுகவும் இணைந்து பதவிக்கு வர பாஜக உதவி செய்ததாகச் சொன்னதை வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.




