மகாராஷ்டிராவில் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை கமிஷனராக ஐ.ஏ.எஸ் அதிகாரி துகாராம் முண்டே பதவிக்கு வந்த பிறகு மாநிலம் முழுவதும் அதிரடி ரெய்டு நடத்தி வருகிறார். ஆரம்பத்தில் பால் கலப்படத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்தார். அதன் பிறகு உணவகங்களுக்கு எதிராக அவர் எடுத்துள்ள நடவடிக்கையால் மும்பை போன்ற முக்கிய நகரங்களில் இருக்கும் ஓட்டல்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளன.
சுத்தம் மற்றும் தரமான பொருட்களை பயன்படுத்தாத உணவகங்களின் லைன்சென்சை தற்காலிகமாக முடக்கி வரும் துகாராம் முண்டேயின் நடவடிக்கையில் முன்னணி உணவகங்களாக மெக்டொனால்டு, கே.எப்.சி போன்றவை கூட தப்பவில்லை.
இதுவரை 71 ஓட்டல்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள பாம்பே பிரசிடென்சி ரேடியோ கிளப்பில் ரெய்டு நடத்தியபோது 47 சதவீதம் விதிமுறை மீறல் இருந்தது கண்டறியப்பட்டது. சமையலறையில் ஏராளமான ஈக்களையும், இறந்த கரப்பான் பூச்சிகளையும் கண்டறிந்தனர்.
மேலும், உணவு தயாரிக்கும் பகுதிகளுக்கு மேலே உள்ள கூரையில் வண்ணப்பூச்சு மற்றும் சாந்து உரிந்து போயிருந்ததையும், சலவைத்தூள் மற்றும் பிற இரசாயனங்கள் உணவுக்கு அருகில் வைக்கப்பட்டிருந்ததையும், உணவுப் பொருட்கள் நேரடியாகத் தரையில் வைக்கப்பட்டிருந்ததையும், அசைவ உணவுகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட தூய்மையற்ற குளிர்சாதனப் பெட்டிகள் இருந்ததையும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அதன் லைசென்ஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டது.
மெக்டொனால்டில் உயிருள்ள கரப்பான் பூச்சி
மும்பையின் தென்பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு மெக்டொனால்டு உணவகத்தில் நடத்தப்பட்ட சோதனையில், உயிருள்ள கரப்பான் பூச்சிகள், பூச்சிப் பொறிகள் இல்லாமை, சமையலறைத் தரையில் அழுகிய உணவுக் கழிவுகள், அழுக்கான துடைக்கும் துணிகள் மற்றும் பாதுகாப்பு உறைகள் இல்லாத, தூசி படிந்த விளக்குகள் ஆகியவை கண்டறியப்பட்டது. மேலும், ஊழியர்கள் அழுக்கான காலணிகள் மற்றும் கறை படிந்த துடைக்கும் துணிகளைக் கையாண்ட பிறகு, கைகளைக் கழுவாமல் உடனடியாக உண்ணத் தயாரான உணவைக் கையாண்டதும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து அதன் லைசென்ஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டது. இதே போன்று ஏராளமான பிரபல உணவகங்களின் லைசென்ஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.
சுத்தத்திற்கு மாறிய வடாபாவ் வியாபாரிகள்
துகாராம் முண்டேயின் இந்த அதிரடி ரெய்டால் மும்பையில் உள்ள வடாபாவ் கடைக்காரர்கள் தாங்களாகவே முன்வந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
வடா பாவுக்குப் பெயர் பெற்ற மும்பையின் சுர்பி ஸ்வீட்ஸ் கடையில் உணவு சுகாதாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் இருப்பதைக் காணமுடிந்தது. ஊழியர்கள் கையுறைகள் மற்றும் தலைக் கவசங்கள் அணிந்திருந்த நிலையில், வாடிக்கையாளர்களுக்கு வடா பாவ் டிஷ்யூ பேப்பர்களுடனும் காகிதத் தட்டுகளிலும் பரிமாறினர்.
சமையலறையில்தான் மிக முக்கியமான மாற்றங்கள் காணப்பட்டன. உணவு தயாரிக்கும் பகுதி சுத்தமாகப் பராமரிக்கப்பட்டதுடன், உணவைச் சேமித்து வைப்பதிலும் குளிரூட்டப்பட்ட சேமிப்பு வசதியிலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. மேலும், அந்த உணவகம் தனது உணவு உரிமத்தைக் காட்சிப்படுத்தியுள்ளதுடன், உணவு தயாரிக்கக் கடலை எண்ணெய் பயன்படுத்தப்படுத்தவும் ஆரம்பித்துள்ளது. கடை மேலாளர் லலித் சர்மா இது பற்றி கூறுகையில், கடையில் உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் தரங்கள் பின்பற்றப்படுகின்றன.
சமையல் எண்ணெய் ஒரு நாளைக்கு இரண்டு முறை மாற்றப்படுகிறது, அதே நேரத்தில் ஊழியர்களுக்கு கையுறைகள் மற்றும் தலையில் தொப்பிகள் கட்டாயம். வாடிக்கையாளர்களுக்கு காகித தட்டுகள் மற்றும் திசு பேப்பர்களும் வழங்கப்படுகின்றன”என்று தெரிவித்தார்.
வடாபாவ் வியாபாரிகளிடம் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து மும்பை மக்களும் அதிக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மும்பை மக்கள் இதற்காக துகாராம முண்டேயிக்கு நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளனர்.




