தமிழகத்தில் காலியாக இருக்கும் ராஜ்ய சபா எம்.பி சீட்டை காங்கிரஸூக்கு கொடுத்திருந்தது தவெக. காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி இன்று தலைமைச் செயலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தார். ஆனால், இந்த விவகாரத்தில் பிரவீன் சக்கரவர்த்தி நடந்து கொண்ட விதம் முதல்வர் விஜய்யை டென்ஶனாக்கியிருப்பதாக கிசுகிசுக்கின்றனர் கோட்டை வட்டாரத்தினர்.
இதுதொடர்பாக நம்மிடம் பேசிய உள்விவகாரம் அறிந்த சிலர், ‘காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி ராஜ்ய சபா எம்.பி ஆவார் என்கிற ஒரே காரணத்துக்காகதான் முதல்வர் விஜய் அந்த எம்.பி சீட்டை விட்டுக் கொடுத்தார். தவெக – காங்கிரஸ் கூட்டணி அமைய காரணமாக இருந்தவர் என்பதால் பிரவீன் சக்கரவர்த்தி எம்.பி ஆவதில் முதல்வருக்குமே பெரும் மகிழ்ச்சிதான்.
‘தமிழ்நாடு சமூகநீதி முற்போக்கு கூட்டணி’
ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானவுடன் பிரவீன் சக்கரவர்த்தி தானாக முந்திக்கொண்டு ‘தமிழ்நாடு சமூகநீதி முற்போக்கு கூட்டணி’ என ட்வீட் செய்தது முதல்வரை டென்ஷன் ஆக்கிவிட்டது. கூட்டணி கட்சி தலைவர்களுடன் கலந்து பேசி, அத்தனை கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்பாகவும் ஒரு முக்கிய நிகழ்வில் கூட்டணியின் பெயரை அறிவிக்க வேண்டும். இடைத்தேர்தலை முன்னிட்டு அந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென முதல்வரின் வியூக வகுப்புக்குழு திட்டமிட்டு வைத்திருந்தது. ஆனால், இந்த கூட்டணியில் நான் ‘பெரிய ஆள்’ என்பதைக் காட்டிக் கொள்ள கூட்டணியின் பெயரை பிரவீன் சக்கரவத்தி முந்திக் கொண்டு அறிவித்துவிட்டார்.

இதில் முதல்வர் விஜய்யே கடும் அப்செட். பிரவீன் சக்கரவர்த்தியின் ட்வீட் வெளியான அடுத்த ஒன்றிரண்டு மணி நேரங்களிலேயே கூட்டணியின் பெயரை யாரும் தப்பித் தவறிக் கூட பயன்படுத்தக் கூடாது, தலைவரே முறையாக அறிவிப்பார் என தவெக நிர்வாகிகளுக்கு அவசர அலர்ட்டும் தவெக நிர்வாகிகளுக்கு சொல்லப்பட்டது. முதல்வர் தரப்பின் அதிருப்தியும் காங்கிரஸ் தரப்புக்கு சொல்லப்பட்டிருக்கிறது. அதற்குள் கம்யூனிஸ்ட்டுகளும் களத்தில் இறங்கிவிட்டார்கள்.
பெ.சண்முகம் ‘அதிக பிரசங்கித்தனம்’ என விமர்சிக்க, ‘நாங்கள் இந்த கூட்டணியில் இல்லை’ என மு.வீரபாண்டியன் ஒரே போடாக போட்டார். கம்யூனிஸ்ட்டுகளின் இந்த எதிர்வினை முதல்வர் தரப்பை இன்னும் உஷ்ணப்படுத்திவிட்டது.
‘முதல்வர் அப்செட்டாக இருக்கிறார். கம்யூனிஸ்ட்டுகளை சமரசம் செய்ய வேண்டியது காங்கிரஸின் பொறுப்பு. உடனடியாக எதாவது செய்யுங்கள்’ என கதர்சட்டை அமைச்சர்களிடம் தவெகவின் சீனியர் அமைச்சர் ஒருவர் அனலடிக்க பேசியிருக்கிறார்.
இதைத் தொடர்ந்துதான் கம்யூனிஸ்ட்டுகளை அவர்களின் அலுவலகத்துக்கே போய் சாந்தப்படுத்தும் முயற்சியை கையில் எடுத்தது காங்கிரஸ். வேட்புமனு தாக்கல் செய்த கையோடு பிரவீன் சக்கரவர்த்தி கம்யூனிஸ்ட்டுகளின் அலுவலகங்களுக்கு செல்வார் என்கிற தகவல் கிடைத்தவுடன்தான் முதல்வர் கொஞ்சம் கூல் ஆனார்.

அதன்பிறகுதான் வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்வுக்கும் வந்தார். வெளியே வந்து பத்திரிகையாளரிடம் பேசிய பிரவீன் சக்கரவர்த்தி ‘முதல்வரின் கருணையாலும் பெருந்தன்மையாலும் காங்கிரஸூக்கு எம்.பி சீட் கிடைத்திருக்கிறது’ என விஜய்யை ஏகத்துக்கும் புகழ்ந்தார்.!




