அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் மிட் டேர்ம் தேர்தல் நடக்க உள்ளது. இது அமெரிக்காவின் நாடாளுமன்றமான காங்கிரஸுக்கான தேர்தல் ஆகும்.
ட்ரம்பிற்குப் பெரும்பான்மை வேண்டும்!
இதுவரை அமெரிக்க அதிபர் ட்ரம்பின் செயல்களுக்கு காங்கிரஸில் அதிருப்தி நிலவினாலும், அவருக்கு எதிராக எதுவும் செய்ய முடியாமல் இருந்ததற்கான காரணம் – காங்கிரஸில் ட்ரம்பின் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் அதிகம் இருந்ததே.
ட்ரம்ப் அவரது அதிரடிகளைத் தொடர வேண்டுமானால், மீண்டும் குடியரசுக் கட்சியே காங்கிரஸில் பெரும்பான்மையாக இடம்பெற வேண்டும்.
ஒரு சிக்கல்…
இதில் ஒரு சிக்கல் நீடிக்கிறது – அது ஈரான் போர்.
ஈரான் போரினால் அமெரிக்காவில் பெட்ரோல் விலை அதிகரித்துள்ளது. இதில் அமெரிக்க மக்களுக்குக் கடும் அதிருப்தி.
மிட் டேர்ம் தேர்தலையொட்டி ஈரான் போர் நிற்காது என்று அறிவித்துவிட்டார் ட்ரம்ப். ஆனால், இது தொடர்ந்து பெட்ரோல் விலை அதிகரித்து இருந்தால் அமெரிக்க மக்களுக்கு அதிருப்தி.
அமெரிக்க மக்களைத் திருப்திப்படுத்த ஈரான் போரில் இருந்து பின்வாங்கினால், ட்ரம்பின் இமேஜ் பாதிக்கப்படும்.
இதனால், இந்த இரண்டையும் பேலன்ஸ் செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப். இது அவரது ட்ரூத் சமூக ஊடகப் பதிவில் நன்கு தெரிகிறது…
“அமெரிக்கா முழுவதும் விலைவாசி உயர்ந்துள்ளதற்குக் காரணம் ‘தூங்குமூஞ்சி’ ஜோ பைடனும் அவருடைய நிர்வாகமும்தான். அதற்குக் காரணம் ட்ரம்ப் அல்ல என்பதை அனைவரும் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
இப்போது இருப்பதைவிட பைடனின் ஆட்சியில்தான் கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருந்தது. அதுமட்டுமின்றி, ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதையும் நாம் தடுத்து நிறுத்தியுள்ளோம்.

எண்ணெய் விலையைத் தவிர (அதுவும் தற்காலிகமானதுதான்), மற்ற அனைத்துப் பொருட்களின் விலைகளும் வேகமாகச் சரிந்து வருகின்றன.
ஈரானுடனான இந்த ராணுவ மோதல் முடிவுக்கு வந்தவுடனே எண்ணெய் விலையும் சீக்கிரம் கீழே இறங்கும். அந்த மோதலும் வெகு விரைவில் முடிவுக்கு வந்துவிடும்.”
ட்ரம்பின் இந்தச் சமாளிப்பு அமெரிக்க மக்களிடம் எடுபடுமா என்பது நவம்பர் மாதத் தேர்தலில் தெரிந்துவிடும்
அமெரிக்காவில் ஆயுதக் கையிருப்பு குறைந்துவிட்டது என்கிற குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது. இதையும் சமாளிக்க இன்னொரு பதிவை வெளியிட்டுள்ளார்…
“அமெரிக்கா தனது வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு மிகச் சிறந்த மற்றும் அதிநவீன ஆயுதங்களை உற்பத்தி செய்து வருகிறது என்ற அறிக்கையை நான் இப்போதுதான் பெற்றுள்ளேன்.
மத்தியக் கிழக்கிலும் பிற பகுதிகளிலும் உள்ள நமது படைகளுக்கு இந்த ஆயுதங்கள் நாள்தோறும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
நமது பாதுகாப்புத் துறை சார்ந்த தொழிற்சாலைகள் 24 மணி நேரமும் இடைவிடாமல் இயங்கி வருகின்றன.

அதே நேரத்தில், ஒவ்வொரு நிறுவனமும் சராசரியாக 4 முதல் 5 புதிய பிரமாண்டமான ஆலைகளையும் புதிதாகக் கட்டி வருகின்றன!
ஏற்கனவே நமது கையிருப்பில் அதிக எண்ணிக்கையில் உள்ள ‘பேட்ரியட்’, ‘தாட்’ அமைப்புகள், ‘டொமாஹாக்’ மற்றும் பிற தரப்படுத்தப்பட்ட ஏவுகணை அமைப்புகளின் உற்பத்தியிலேயே இந்தத் தயாரிப்பில் முதன்மைக் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது”.
ட்ரம்பின் இந்தச் சமாளிப்புகள் அமெரிக்க மக்களிடம் எடுபடுமா என்பது நவம்பர் மாதத் தேர்தலில் தெரிந்துவிடும்.




