ஈரான் போர் தொடங்கி கிட்டத்தட்ட 30 நாள்கள் ஆகிவிட்டன.
தற்காலிக போர் நிறுத்தத்தால், என்ன தான் ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் மாறி மாறி பெருமளவில் தாக்கிக் கொள்ளவில்லை என்றாலும், ஹார்முஸ் நீர்சந்தி இன்னும் மூடி தான் இருக்கிறது.
இந்தியாவிற்கு எரிசக்தி கொண்டு வரும் முக்கிய போக்குவரத்துப் பாதை ‘ஹார்முஸ் நீர்சந்தி’.
ஹார்முஸ் நீர்சந்தி மூடப்பட்டிருந்தாலும், இந்தியாவிற்கு பல கப்பல்கள் அந்த வழியாக போர் தொடங்கிய நாள் முதலே வந்துக்கொண்டிருக்கின்றன.
‘அது எப்படி?’ என்பதை நேற்று நடந்த விளக்கக் கூட்டத்தில் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் இயக்குநர் ஓபேஷ் குமார் ஷர்மா பேசியதாவது…
“ஹார்முஸ் நீர்சந்தியில் இருக்கும் கடற்படையினரின் நலனை உறுதி செய்யவும், கடல்சார் போக்குவரத்துத் தடையின்றி நடைபெறவும் எங்கள் அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.
மார்ஷல் தீவுகளின் கொடியுடன் பயணிக்கும் ‘எம்.வி. மிசோஸ் கேஸ்’ (MV Misos Case) என்ற கச்சா எண்ணெய் ஏற்றிச் வரும் வணிகக் கப்பல், மே 25-26-ம் தேதி இரவில் ஹார்முஸ் நீர்ச்சந்தியைப் பாதுகாப்பாகக் கடந்தது.
இந்தக் கப்பல் 2,70,000 மெட்ரிக் டன் கச்சா எண்ணெயுடன் ஜூன் 3-ஆம் தேதி விசாகப்பட்டினம் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹார்முஸ் நீர்சந்தியில் உள்ள அனைத்து இந்தியக் கடற்படையினரும் பாதுகாப்பாக உள்ளனர். இதுவரை எந்தவொரு அசம்பாவிதமும் பதிவாகவில்லை.
கப்பல் போக்குவரத்து பொது இயக்குநரகத்தின் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டதிலிருந்து, இதுவரை 1,00,800-க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகளையும், 2,498 மின்னஞ்சல்களையும் அனுப்பியுள்ளோம்… பெற்றுள்ளோம்.

மேலும், இதுவரை 3,422 இந்தியக் கடற்படையினர் பாதுகாப்பாகத் தாய்நாடு திரும்புவதற்கு நாங்கள் வழிவகை செய்துள்ளோம். இந்தியா முழுவதும் உள்ள துறைமுகங்களின் செயல்பாடுகள் வழக்கம் போல் தங்குதடையின்றி நடந்து வருகின்றன.
ஹார்முஸ் நீர்சந்தியில் 1 எல்.பி.ஜி டேங்கர் மற்றும் 5 கச்சா எண்ணெய் டேங்கர்கள் உட்பட மொத்தம் 13 இந்தியக் கொடி ஏந்திய கப்பல்கள் இருக்கிறது. தற்போது அவற்றுக்கு முன்னுரிமை அளித்து, அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றுவதே நமது முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது”.




