மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் தீப்லதா என்ற பெண் பிரசவத்திற்காகச் சேர்க்கப்பட்டு இருந்தார். அவருக்கு பிரசவ வலி வந்த பிறகும் டாக்டர்கள் அவருக்குப் பிரசவம் பார்க்காமல் 9 மணி நேரம் காக்க வைத்ததாக, அப்பெண்ணின் கணவர் சுரேந்திரா குற்றம்சாட்டியுள்ளார். கர்ப்பத்தின்போது தீப்லதாவிற்கு எந்த விதப் பிரச்னையும் இல்லை.
ஆனால் பிரசவத்தின்போது குழந்தை இறந்து பிறந்தது. இதற்கு டாக்டர்களின் கவனக்குறைவுதான் காரணம் என்று சுரேந்திரா குற்றம்சாட்டி இருக்கிறார்.
இது குறித்து தீப்லதாவின் கணவர் சுரேந்திரா அளித்த பேட்டியில், ”பிரசவ வலி ஏற்பட்ட பிறகும் என்னுடைய மனைவிக்குப் பிரசவம் பார்க்காமல், 9 மணி நேரம் காக்க வைத்தார்கள். பிரசவத்தின்போது அழுத்தம் கொடுப்பதற்காக என் மனைவியின் நெஞ்சில் ஒரு பெண் உதவியாளர் ஏறி அமர்ந்து கொண்டு காலால் அழுத்தம் கொடுத்தார். அவர்கள் அதிகப்படியான அழுத்தம் கொடுத்ததால்தான் குழந்தை இறக்க நேரிட்டது” என்று குற்றம்சாட்டினார்.
ஆனால் அது போன்று நடக்க வாய்ப்பு இல்லை என்று மருத்துவமனையின் டாக்டர் திலிப் மாதவி தெரிவித்தார். மேலும், இது குறித்து விரிவாகப் பேச மறுத்துவிட்டார். உள்ளூர் கவுன்சிலர் வாசிம் கான் இது குறித்து கூறுகையில், “மருத்துவமனை சிகிச்சை கொடுக்கும் விதம் குறித்து அடிக்கடி புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள அறிவுறுத்தப்படும்” என்று தெரிவித்தார்.




