நாகர்கோவில் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வியாபாரி சபரி வர்மன் சிறை காவலர்களால் தாக்கப்பட்டு மரணம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 13-ம் தேதி மரணமடைந்த அவரது உடலை இதுவரை குடும்பத்தினர் பெற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை வீட்டுக்குச் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார் தி.மு.க எம்.பி கனிமொழி.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “சாதாரணமாக வாழ்ந்துகொண்டிருந்த மாற்றுத்திறனாளி சபரி வர்மனை போலீஸார் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் வீட்டுக்கு அனுப்பிய அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
குடும்பத்தினர் சிறையில் சென்று சந்தித்தபோது, அவர் உடல்நலத்தோடு இருந்துள்ளார். அதன்பிறகு திடீரென்று அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக குடும்பத்தினருக்கு தகவல் தரப்பட்டுள்ளது.
அதன்படி குடும்பத்தினர் சென்று பார்த்தபோது சபரி வர்மன் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். பிரேதப் பரிசோதனையில் அவரது உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்தது தெரியவந்துள்ளது. இருப்பினும் அரசியல் கட்சிகள் மற்றும் குடும்பத்தார் போராடிய பிறகுதான் அரசு நடவடிக்கையே எடுக்கத் தொடங்கியுள்ளது.
எனவே இது நம்ப முடியாத ஒன்றாக இருக்கிறது. ஆஸ்பத்திரிக்குக் கொண்டு வரும்போதே இறந்துவிட்ட ஒருவருக்கு யாரையுமே கேட்காமல் எப்படி பிரேதப் பரிசோதனை செய்தார்கள்? மேலும் அவரது குடும்பத்தினருக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல்கள் இருக்கின்றன.
சபரி வர்மன் உடலை வாங்கும்படி அவரது தந்தையிடம் வலியுறுத்திக்கொண்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற இந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய அமைச்சர் இதுவரை முன்வரவில்லை. அரசின் சார்பில் கூட யாரேனும் ஆறுதல் கூறவில்லை.
பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு எந்த நிவாரணமும் இதுவரைக்கும் அறிவிக்கப்படவில்லை. அவருடைய மனைவிக்கு அரசு வேலை தருவதாக அரசு வாய் திறந்து இதுவரை கூறவில்லை.
இப்படிப்பட்ட ஒரு சூழலில், ‘அரசு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை’ என்று குடும்பத்தினர் கூறியதோடு, ‘இந்த விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும்’ என்று சபரி வர்மனின் மனைவி மற்றும் சகோதரி கூறியுள்ளனர்.
எனவே நடந்த சம்பவத்துக்கு முதலில் அரசு பொறுப்பேற்க வேண்டும். அரசைத்தாண்டி ஒரு தவறு நடந்துள்ளது. இதற்கு முன்பு இதுபோல நடந்தபோது அரசு பொறுப்பேற்றது. ஆனால், இந்த அரசு யார் மீதாவது பழி போடுவதற்குத்தான் பார்க்கிறார்களே தவிர எதற்கும் பொறுப்பேற்க தயாராக இல்லை.

அதுமட்டுமில்லாமல் தற்போது சிறையில்கூட இருந்த கைதிகள் மீதும் வழக்கு போடப்பட்டிருக்கிறது. கைதிகள் மீது வழக்கு போட்டு வழக்கை திசை திருப்புவதற்குப் பார்ப்பதாக குடும்பத்தினர் உறுதியாக நம்புகிறார்கள். வழக்கைத் திசை திருப்புவதற்காகவும், சிலரைக் காப்பாற்றுவதற்காகவும் கைதிகள் மீது வழக்கு போடப்பட்டிருக்கிறது.
இப்படி சிக்கல்கள், மறைக்கக்கூடிய சூழ்ச்சிகள் நிறைந்த ஒரு சூழலைத்தான் நாம் இங்கே பார்க்க முடிகிறது. அதோடு எப்போது இறந்தார் என்று பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை. அது என்ன மாதிரி அறிக்கை என்று தெரியவில்லை.
காயங்களால் அவர் உயிர் இழக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. அப்படியெனில் அவர் உயிர் இழப்பிற்கு காரணம் என்ன? அதை தெளிவாகக் கூற வேண்டும். சிறையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஏன் தரவில்லை?
பிரேதப் பரிசோதனை செய்தபோது எடுக்கப்பட்ட காட்சிகளை ஏன் கொடுக்கவில்லை? எனவே பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதைத்தான் தி.மு.க வலியுறுத்துகிறது” என்றார்.




