மகாராஷ்டிரா சிவசேனாவில் 2022-ம் ஆண்டு ஏற்பட்ட பிளவுக்கு பிறகு உத்தவ் தாக்கரே தனி கட்சி மற்றும் தனி சின்னத்துடன் செயல்பட்டு வருகிறார். ஆனாலும் தற்போது சிவசேனாவின் பெயர் மற்றும் சின்னத்தை தன் வசம் வைத்திருக்கும் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தொடர்ந்து ஆப்ரேசன் டைகர் என்ற பெயரில் உத்தவ் தாக்கரே கட்சியில் இருக்கும் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை தனது பக்கம் இழுக்கும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டு இருந்தார்.
கடந்த சில நாட்களில் அந்த நடவடிக்கைகள் தீவிரம் அடைந்தது. இதனால் உத்தவ் தாக்கரே கட்சியை சேர்ந்த 6 எம்.பி.க்கள் ஏக்நாத் ஷிண்டே கட்சியில் சேர முடிவு செய்தனர்.
இதற்காக அவர்களுக்கு ரூ.50 கோடி பேரம் பேசப்பட்டு இருப்பதாக உத்தவ் தாக்கரே கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் குற்றம் சாட்டி இருந்தார். அதில் தலா ரூ.15 கோடி கொடுக்கப்பட்டுவிட்டதாகவும் குறிப்பிட்டு இருந்தார். அதிருப்தி எம்.பி.க்கள் ஏற்கனவே டெல்லியில் இருந்தனர். அவர்களை ஏக்நாத் ஷிண்டே டெல்லி சென்று சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பை தொடர்ந்து அவர்கள் சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் தங்கள் 6 பேரையும் தனி அணியாக அங்கீகரிக்க வேண்டும் என்று கோரி கடிதம் கொடுத்துள்ளனர். மொத்தமுள்ள 9 எம்.பி.க்களில் 6 பேர் ஆதரவு இருப்பதால் கட்சி தாவல் தடுப்பு சட்டத்தின் கீழ் தங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் அவர்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
நாங்கள் கையெழுத்திடவில்லை`
இருப்பினும், அந்த ஆறு பேரில் ஓம்ராஜே நிம்பல்கர் (தாராஷிவ்) மற்றும் சஞ்சய் தினா பாட்டீல் (மும்பை வடகிழக்கு) ஆகிய இருவரும் அந்தக்கடிதத்தில் கையெழுத்திடவில்லை என்று சிவசேனா (உத்தவ்) தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு தாங்கள் நேற்று டெல்லியில் இல்லை என்று பாட்டீலும், நிம்பல்கரும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் 6 எம்.பி.க்களையும் தங்கள் பக்கம் கொண்டுவரும் ‘ஆபரேஷன் டைகர்’ (Operation Tiger) நடவடிக்கை முழுமையாக நிறைவடைந்துவிட்டதாக ஏக்நாத் ஷிண்டே தரப்பில் தெரிவிக்கிறார்கள். உத்தவ் தாக்கரே தரப்பில் சஞ்சய் ராவத் தலைமையிலான குழு சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து 6 பேரையும் தனி அணியாக அங்கீகரிக்க கூடாது என்று கூறி கடிதம் கொடுத்துள்ளார்.
எம்.பி.க்கள் கூட்டத்திற்கு அழைப்பு
அதோடு இன்று டெல்லியில் எம்.பி.க்கள் கூட்டத்திற்கு உத்தவ் தாக்கரே தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் கட்டாயம் அனைத்து எம்.பி.க்களும் பங்கேற்கவேண்டும் என்று கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் 4 எம்.பி.க்கள் கலந்து கொள்ளவேண்டும் என்று உத்தவ் தாக்கரே தரப்பில் எதிர்பார்க்கிறது. அப்படி கலந்து கொள்ளும்பட்சத்தில் ஏக்நாத் ஷிண்டேயை ஆதரிக்கும் எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.
பணம் கிடைக்காமல் விமானத்தில் ஏற மறுப்பு
அதிருப்தி எம்.பி.க்களில் இடம் பெற்றுள்ள சஞ்சய் தேஷ்முக் இதுவரை 4 கட்சிகளில் இடம் பெற்று இருக்கிறார். முதலில் ஒன்று பட்ட சிவசேனாவில் இருந்தார். அதன் பிறகு காங்கிரஸ் மற்றும் பா.ஜ.கவிற்கு தாவினார். கடைசியாக உத்தவ் தாக்கரே கட்சி சார்பாக போட்டியிட்டு எம்.பியானார். அங்கேயும் நிலைத்து நிற்காமல் 5வதாக சிவசேனா(ஷிண்டே) விற்கு தாவி இருக்கிறார். டெல்லியில் சஞ்சய் ராவுத் அளித்த பேட்டியில்,”ஆபரேஷன் டைகர்’ (Operation Tiger) எளிதானதாக இருக்காது. மகாராஷ்டிராவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலைக்கு வாங்கப்படுகின்றனர். வாக்குறுதி அளித்தபடி 50 கோடி ரூபாயில் 15 கோடி ரூபாயை முன்பணமாகப் பெறாதவரை, டெல்லிக்குச் செல்லும் சிறப்பு விமானங்களில் ஏறக்கூட அவர்கள் மறுத்துவிட்டனர்.
தாராஷிவ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஓம்பிரகாஷ் ராஜே நிம்பல்கர் கட்சி மாறினால், அவரது தந்தையின் 20 ஆண்டுகள் பழமையான கொலை வழக்கில் சாதகமான தீர்ப்பு வழங்கப்படும் என்று அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. உண்மையில் செவ்வாய்க்கிழமை வரவிருந்த அந்தத் தீர்ப்பு சனிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.” என கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.




