மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியிருக்கிறது. முதல் கட்சியாக திமுக தங்களின் வேட்பாளர்களை அறிவித்திருக்கும் நிலையில், தவெக சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை இன்று மாலை முதல்வர் விஜய் அறிவிக்கவிருப்பதாக தகவல்.
இடையில் தவெக முகாமில் ஒரு பெரிய குழப்பமே எழுந்து அடங்கியிருப்பதாகவும் தகவல் சொல்கின்றனர் பனையூர் வட்டாரத்தினர்.
இதுதொடர்பாக நம்மிடையே பேசிய தவெகவின் சீனியர்கள் சிலர், ‘அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து தவெகவுக்கு வந்த போதே அவர்களுக்கு இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என உறுதி கொடுக்கப்பட்டது. தலைவரும் இடைத்தேர்தலில் ராஜினாமா செய்தவர்களையே நிறுத்தி வென்றுவிடலாம் என நம்பிக்கையோடு இருந்தார். ஆனால், இடையில் அதிமுகவினர் பதவி விலகி தவெகவுக்கு வருவது ‘குதிரை பேரம்’ என பெருத்த விமர்சனத்தை கிளப்பியது. எதிர்க்கட்சிகள் கூட்டாக ‘குதிரை பேரம்’ என விமர்சிப்பதால் இடைத்தேர்தலில் மீண்டும் ராஜினாமா செய்தவர்களுக்கே வாய்ப்புக் கொடுத்தால் கெட்டப் பெயர் ஆகிவிடும் என சிலர் முதல்வரிடமே அறிவுரை கூறியிருக்கின்றனர்.
முதல்வரும் ‘குதிரை பேர’ விமர்சனத்தை கருத்தில் கொண்டிருக்கிறார். அதனால்தான் மதுராந்தகம், தாராபுரம் தேர்தல் அறிவிப்பு வந்த உடனேயே தன்னுடைய சகாக்களிடமும் இது குறித்து பேசியிருக்கிறார். அதில் மதுராந்தகத்தில் போட்டியிட்ட மரகதம் குமரவேல், தாராபுரத்தில் போட்டியிட்ட சத்யபாமா இருவரில் ஒருவருக்கு மட்டும் சீட் கொடுத்தால் என்ன? இன்னொரு தொகுதிக்கு கட்சி ஆளே இறக்குவோமே என ஒரு ஐடியாவும் பேசப்பட்டிருக்கிறது. அப்படி ஒருவருக்குதான் வாய்ப்பு எனில் யாருக்கு வாய்ப்பை மறுப்பது?

இப்படி ஒரு கேள்வி வரவே, மரகதம் குமரவேல்தான் கட்சியில் சேர்ந்தவுடனேயே தொகுதிக்குள் செலவு செய்து பணியை தொடங்கிவிட்டார். அவருக்கு சீட்டை மறுக்க முடியாது. எனில், சத்யபாமாவை கழட்டி விடலாமா என்றும் பேசப்பட்டிருக்கிறது. அப்போதுதான் இன்னொரு கருத்தும் முதல்வரின் முன் வைக்கப்பட்டது. தாராபுரத்தில் தவெகவுக்கு செல்வாக்கு கிடையாது. தேர்தலில் மூன்றாமிடம்தான் பிடித்தோம். மேலும், போட்டியிட ஆள் இல்லாமல் ‘கழக நிர்வாகி’ ஒருவரைத்தான் நிறுத்தினோம். இப்படியிருக்க அந்த தொகுதியில் போய் ரிஸ்க் எடுத்தால் ஆபத்தாகிவிடும். மேலும், இன்னும் நம்மை நம்பி பல அதிமுக சீனியர்கள் கட்சியை விட்டு வர தயாராக இருக்கின்றனர். சத்யபாமாவை கழட்டிவிட்டால் அது தவெகவுக்கு வர தயாராக இருக்கும் அதிமுகவினருக்கு அவநம்பிக்கையை கொடுக்கும் என சிலர் விளக்கிக் கூறியிருக்கின்றனர். இதையும் கருத்தில் கொண்ட முதல்வர் மரகதம் குமரவேல், சத்யபாமாவின் பெயர்களையே டிக் அடித்திருக்கிறார்’ என்கின்றனர்.
அறிவாலயத்துக்கு முன்பாக வேட்பாளர் அறிவிப்பை வெளியிட்டுவிட வேண்டும் என்பதில் தவெக குறியாக இருந்திருக்கிறது. இறுதி நேரத்தில் ஏற்பட்ட குழப்பத்தால்தான் வேட்பாளர் அறிவிப்பு தாமதமாகிவிட்டது என்கின்றனர். முதல்வர் விஜய் நாளை இரவு வெளிநாட்டுக்கு செல்லும் நிலையில் இன்று மாலையே தவெகவின் வேட்பாளர் அறிவிப்பு வெளியாகக்கூடும் என்கின்றனர்.




