இடைத்தேர்தலில் தி.மு.க போட்டியிடுமா.. புறக்கணிக்குமா.. என்ற குழப்பம் நீடித்துவந்த நிலையில், வேட்பாளர்களை அறிவித்து ஷாக் கொடுத்திருக்கிறார் அக்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின். ‘போட்டியிட வேண்டும்’ என்ற முடிவும் வேட்பாளர் தேர்வும் உதயநிதியின் ப்ளான்’ என்கிறர்கள் விவரமறிந்த உடன்பிறப்புகள்.
நம்மிடம் பேசிய தி.மு.க சீனியர்கள், “த.வெ.க-வுக்கு மக்கள் மத்தியில் இன்னும் மாஸ் குறையவில்லை. மதுராந்தகம், தாராபுரம் இரண்டு அ.தி.மு.க வென்ற தொகுதி என்பதால் நாம் தேர்தலை புறக்கணிப்போம். த.வெ.க ஒரு தொகுதியில் தோற்றால்கூட போதும் என்ற கருத்துதான் கட்சிக்குள் நிலவியது.
இந்த விவகாரங்களை கேள்விப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கொந்தளித்துவிட்டார், ‘தேர்தலை புறக்கணிப்பது கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும்.. பயந்து ஓடிவிட்டோம் என விமர்சிப்பார்கள்’ என புறக்கணிக்கும் முடிவை மொத்தமாக மறுத்தார். அதோடு உதயநிதி நிற்கவில்லை, ‘இரண்டு தொகுதியையும் வெல்வது என்னுடைய பொறுப்பு எனச் சொல்லி வேட்பாளர் தேர்விலும் அவரே முழு அதிகாரத்தை செலுத்தியிருக்கிறார்.
வி.சி.க-விலிருந்து விலகி தி.மு.க-வில் இணைந்த பனையூர் பாபுவை வேட்பாளராக்கலாம் என்பதே முதல்வரின் மருமகன் சபரீசனின் சாய்ஸாக இருந்திருக்கிறது. அதேபோல் தாராபுரத்தில் முன்னாள் அமைச்சர் கயல்விழி செல்வராஜை நிறுத்தலாம் எனவும் ஆலோசித்திருக்கிறார்கள். சீனியர்களும் இசைவு தெரிவிக்க சம்பந்தப்பட்ட வேட்பாளர்களிடமும் பேசியிருக்கிறார்கள்.
ஆனால், இந்த சாய்ஸுகளை ஏற்காத உதயநிதி, பரந்தாமனை பரிந்துரை செய்திருக்கிறார். கட்சியில் இணைந்த சில மாதங்களே ஆன பனையூர் பாபுக்கு சீட் கொடுத்தால் கட்சியினரும் அமைச்சர்களும் வேலை செய்வதில் சுணக்கம் ஏற்படலாம் என்ற வாதம் முன்வைக்கப்பட்டிருக்கிறது.
த.வெ.க-வுக்கு ஈடுகொடுத்து அட்டாக் மோடில் பேசவும் பரந்தாமன் சரியாக இருப்பார் எனக் கருதுகிறார் உதயநிதி ஸ்டாலின்.
மேலும், 2026 பொதுத்தேர்தலில் சேகர்பாபுவின் உள்ளடி அரசியலால் பரந்தாமனுக்கு சீட் மறுக்கப்பட்ட போதே உதயநிதிக்கு அதில் வருத்தம்தான். இச்சூழலில் வாழ்வா.. சாவா தேர்தல் என்பதால் அறிந்த முகமாக பரந்தாமனை மதுராந்தகத்தில் நிறுத்தினால் சரியாக இருக்கும் என முடிவெடுத்திருக்கிறார்கள். அதேபோல், கயல்விழி செல்வராஜுக்கு திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் எதிர்ப்பு இருப்பதால் மீண்டும் சீட் கொடுப்பது உட்கட்சி பூசலையே ஏற்படுத்தும் என்பதால் வழக்கறிஞர் சுகன்யா என்பவருக்கு சீட் வழங்கப்பட்டிருக்கிறது. இவர் மகளிரணி நிர்வாகியும்கூட, மேலும் தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் மு.பெ சாமிநாதனின் ஆதரவாளர் ” என்றனர்.




