நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் கிட்டதட்ட 900 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
மேலும் 2400-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக நேபாள பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்திருக்கிறது.
இந்த வெள்ளப் பெருக்கில் தமிழகத்தைச் சேர்ந்த சிலரும் சிக்கியிருக்கின்றனர். இந்நிலையில் நேபாளம், காட்மண்டு செல்லும் உறவினர்களுக்கு உதவ தமிழ்நாடு அரசின் அலுவலர்கள் (Nodal Officers) குழு காட்மண்டுவில் முகாமிட்டிருப்பதாக தமிழக செய்தித் தொடர்பு துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
அதில், ” நேபாள நாட்டிற்கு சுற்றுலா சென்றபோது, 26 ஆகஸ்ட் 2026 அன்று போதே கோசி (Bhote Koshi) ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள், குறிப்பாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் காணாமல் போனதாகவோ அல்லது சிக்கித் தவிப்பதாகவோ தெரிவிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
இதுவரை, தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 சுற்றுலாப் பயணிகள் மீட்கப்பட்டு புதுதில்லிக்கு அழைத்து வரப்பட்டு, பின்னர், அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இன்னும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 84 பயணியர்கள் விவரம் குறித்து தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சில விவரங்களை நேபாள காவல்துறை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் https://udb.nepalpolice.gov.np/disaster வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான விவரங்களை அறிய புதுதில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள்: 9289516712 (Whatsapp / Call) 9868530776 (Mobile No.)
இது தொடர்பாக, நேபாளத்திற்குச் செல்லும் உறவினர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கவும், சம்பந்தப்பட்ட அனைத்து அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்பேரில், தமிழ்நாடு அரசின் மூன்று அலுவலர்கள் (Nodal Officers) கொண்ட குழு காட்மண்டுவில் முகாமிட்டுள்ளது.
கீழ்க்காணும் அலுவலர்கள் காட்மண்டுவிலிருந்து தேவையான உதவிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை மேற்கொள்வார்கள்.
அவர்கள் விவரம் பின்வருமாறு:
Thiru. A. Satya Shivam, (Mob No. 9868207259)
Thiru. P. Thinesh Kannan, (Mob No. 9868530799)
Thiru. S. Ajay, (Mob No. 9868224049)
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்பேரில் தமிழ்நாடு அரசு அலுவலர்கள், நேபாள அரசு, இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் காட்மண்டுவில் உள்ள இந்தியத் தூதரகம் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து, சாத்தியமான அனைத்து வழிகளிலும் இடைவிடாது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.




