இலங்கை விசிட்டை முடித்துவிட்டு, அங்கிருந்து இன்று மதியம் 12.40 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் வந்தார் பிரதமர் மோடி. தமிழக அரசு சார்பில் மோடியை வரவேற்ற ஆளுநர் ரவி, கம்பராமணம் புத்தகத்தைப் பரிசாக வழங்கினார்.
சரியாக மதியம் 1 மணியளவில் பச்சைக் கொடி அசைத்து புதிய பாம்பன் பாலத்தைத் திறந்து வைத்தார். இதை முடித்துவிட்டு இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்து, சிறப்பு பூஜைகளைச் செய்தார்.
இதையடுத்து உரையாற்றிய மோடி, “என் அன்பு தமிழ் சொந்தங்களே, இன்று ராமநவமி, இது ஒரு பவித்திரமான நாள். தமிழகத்தின் சங்க இலக்கியத்திலும் ராமரை பற்றி கூறப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் என்ற இந்த புண்ணிய பூமியிலிருந்து இந்திய மக்கள் அனைவருக்கும் ராம நவமி தின வாழ்த்துகள்.
ராமநாத சுவாமி கோவிலில் இன்று வழிபட்ட போது ஆசிகள் நிரம்ப பெற்றவனாக நான் உணர்ந்தேன். இந்த விஷேச நாளில் ரூ. 8300 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை அர்ப்பணிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த ரயில் மற்றும் சாலை திட்டங்கள் தமிழ்நாட்டிலே இணைப்புத் திறனை வலுப்படுத்தும். இந்த திட்டங்களை பொறுத்து தமிழ்நாட்டின் என் சகோதர சகோதரிகளுக்கு நான் என வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
பாரத ரத்னா கலாம் அவர்களின் பூமி அறிவியலும் ஆன்மிகமும் ஒன்றை ஒன்று நிறைவு செய்பவை என்பதை அவரின் வாழ்வு நமக்கு காட்டுகிறது. அதே போல ராமேஸ்வரத்துக்கான இந்த புதிய பாம்பன் பாலமும்கூட தொழில்நுட்பத்தையும் பாரம்பர்யத்தையும் ஒன்று சேர்க்கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழைமையான ஒரு நகரம் 21ம் நூற்றாண்டின் ஒரு பொறியியல் அற்புதத்தால் இன்று இணைக்கப்படிருக்கிறது. தங்களது தீவிரமான உழைப்பிற்காக நான் நமது பொறியாளர்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழகத்தின் வளர்ச்சிக்காக கடந்த 10 ஆண்டுகளில் 3 மடங்கு நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி அரசை விட தமிழ்நாட்டுக்கு அதிக நிதி தந்துள்ளோம். மத்திய அரசு அனைத்தும் செய்தும் கூட சிலர் தமிழகத்தில் அழுது கொண்டே இருக்கிறார்கள். பாஜக ஆட்சியில் அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.” என்று பேசியிருக்கிறார்
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel





