விஜய்யின் முதல் படமான நாளைய தீர்ப்பு முதல் இறுதி படமான ஜனநாயகன் படத்திலும் நடித்துள்ளார் ஸ்ரீநாத். கல்லூரி காலம் முதலே விஜய்யின் நெருங்கிய நண்பரான ஸ்ரீநாத், விஜய் தனது திரைப்பயணத்தை தொடங்கியபோதே ஸ்ரீநாத்தும் தனது திரைப் பயணத்தை தொடங்கினார். ‘வேட்டைக்காரன்’ போன்ற பல படங்களில் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார். ஸ்ரீநாத்தை வெறும் காமெடி நடிகர் என சுருக்கிவிட முடியாது. அவர் இயக்குநராகவும் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டுள்ளார்.
குறிப்பாக நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான ”வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” என்ற காமெடி படத்தை இயக்கிவர் இந்த ஸ்ரீநாத்தான். தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரியைச் சேர்ந்த எம்.ஜி.ஆர். காலத்து அரசியல்வாதியான ஜி.ஆர்.எஸ்மெண்டுவின் உடன் பிறந்த சகோதரி மகன் தான் ஸ்ரீநாத்.
தூத்துக்குடி த.வெக-வில் பணியாற்றி வந்த அஜிதா ஆக்னல் தனக்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால், அவருக்கு பதவி வழங்கப்படவில்லை. அதனால், சென்னை பனையூரில் விஜய்யின் காரை வழி மறித்ததுடன் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
பின்னர், தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இந்த நிலையில், தூத்துக்குடி தொகுதியில் யாருக்கு சீட் கொடுக்கலாம் என்று விஜய்க்கு நெருக்கடி ஏற்பட்டது. அப்போதுதான் தனது நண்பரான ஸ்ரீநாத்தை களமிறக்க முடிவு செய்தாராம் விஜய். முதலில் தயங்கிய ஸ்ரீநாத், பின்னர் சம்மதம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநாத் 1,00,536 வாக்குகளும், தி.மு.க வேட்பாளரும் அமைச்சருமான கீதாஜீவன், 62,805 வாக்குகள் பெற்றனர். சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என நினைத்த நிலையில், சீட்டும் வழங்கப்படவில்லை. இதனால், “த.வெ.க-வில் பெண்களுக்கு மரியாதை இல்லை. பணம் வாங்கிக் கொண்டுதான் பதவி வழங்கப்படுகிறது” என விமர்சித்தார் அஜிதா.

பின்னர், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி முன்னிலையில் தி.மு.கவில் இணைந்து த.வெ.கவிற்கு எதிராக பிரசாரம் செய்தார். ஆனால், அவரது பிரசாரம் எடுபடவில்லை. ஸ்ரீநாத்தை வெறும் காமெடி நடிகராகவே சித்தரித்து தி.மு.க., அ.தி.மு.க உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் பிரசாரம் செய்தனர். ஆனால், தமிழகத்தில் விஜய்க்கு அடுத்தபடியாக 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று சிட்டிங் அமைச்சர் கீதா ஜீவனையே வீழ்த்தியுள்ளார் ஸ்ரீநாத்.




