தமிழ்நாட்டிலிருந்து நாடாளுமன்றத்துக்கு தவெக அரசால் தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் மேலிடப் பொருப்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி சென்னை தி.நகரில் உள்ள முன்னாள் முதல்வர் காமராஜர் இல்லத்துக்கு சென்றிருந்தார். அங்கு காமராஜர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பிரவீன் சக்ரவர்த்தி, “50 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஒரு கூட்டணி ஆட்சி அமைந்துள்ள சூழலில், அதன் முதல் பிரதிநிதியாக நாடாளுமன்றத்திற்குச் செல்ல எனக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது. இதனை ஒரு பெரிய பொறுப்பாகக் கருதி, இதற்கு வாய்ப்பளித்த முதலமைச்சர் ஜோசப் விஜய்-க்கும், தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது விஜய் அவர்களின் பெருந்தன்மை மற்றும் கருணையைக் காட்டுகிறது.
பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் தமிழ்நாட்டில் காங்கிரஸின் குரல் எப்படி ஓங்கி நின்றதோ, அதேபோன்றதொரு நிலையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். ‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு’ என்ற எங்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. இதனைப் பயன்படுத்தி தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்துவதற்காக அமைச்சர்கள், நான் மற்றும் கட்சியின் தலைவர்கள், தொண்டர்கள் என அனைவரும் பாடுபடுவோம். இதற்காகத்தான் சான்றிதழைப் பெற்றவுடன் நேராகப் பெருந்தலைவர் காமராஜர் இல்லத்திற்கு வந்து மரியாதை செலுத்தினோம்.
தி.மு.க எங்களை ‘எக்ஸ்ட்ரா லக்கேஜ்’ என்று விமர்சித்துள்ளது குறித்துப் பேச இது சரியான தருணம் அல்ல. நாங்கள் இப்போது காமராஜர் இல்லத்தில் காங்கிரஸைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் மீண்டும் காங்கிரஸின் குரல் ஒலிக்கும் என்ற நம்பிக்கையும் விசுவாசமும் எங்களுக்கு உள்ளது. மேலும், நாடாளுமன்றத்தில் ஒரு மசோதா கொண்டு வரப்பட்டால், அதன் மீதான புரிதல் மற்றும் விமர்சனத்தோடு நின்றுவிடாமல், அதற்கான ஆக்கப்பூர்வமான தீர்வையும் முன்வைக்கும் துணிச்சலான குரலாக நான் விளங்குவேன்.” என்றார்.
தொடர்ந்து அவருடன் இருந்த அமைச்சர் விஸ்வநாதன், “காங்கிரஸ் கட்சியை ‘எக்ஸ்ட்ரா லக்கேஜ்’ என்று தி.மு.க விமர்சிப்பது முற்றிலும் தவறான செய்தி. கடந்த 20 ஆண்டுகளாக அரசியலில் தி.மு.க-விற்கு சாதகமாக இருந்தது எங்களுடைய அதிர்ஷ்டம்தான். எங்களை எக்ஸ்ட்ரா லக்கேஜ் என்று கூறுவது, கேஜி (KG) படிக்கும் குழந்தைகள் பேசுவதைப் போன்ற வார்த்தைப் பிரயோகம். இது தவறானது.
தி.மு.க-வின் அமைப்புச் செயலாளராக இருக்கும் அண்ணன் ஆர்.எஸ். பாரதி தொடர்ந்து இத்தகைய விமர்சனங்களை வைப்பது ஏற்புடையது அல்ல. அவர் தனது இந்த முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும். அவர் மாற்றிக் கொள்வார்… என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
திருத்தணியில் இருந்து காஷ்மீர் வரை எங்களது காங்கிரஸ் பேரியக்கத் தொண்டர்கள் மிகவும் வலுவாகவும், மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள். காங்கிரஸ் பேரியக்கம் இனி ஒரு வலுவான பீடுநடை என்ற எழுச்சியோடு தனது பயணத்தைத் தொடரும். கூட்டணி ஆட்சியில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியேறியிருப்பது என்பது, அந்தந்தக் கட்சியின் கொள்கை முடிவைப் பொறுத்தது, அவ்வளவுதான்.




