25
August, 2026

A News 365Times Venture

25
Tuesday
August, 2026

A News 365Times Venture

H-1B விசாவிற்கு சோதனை மேல் சோதனை; மீண்டும் 1 லட்சம் டாலர் கட்டணமா? புது ரூட்டில் ட்ரம்ப் அரசு

Date:

சட்டவிரோதக் குடியேற்றம், உலக நாடுகளின் மீது வரி விதிப்பு… என்கிற அமெரிக்க அதிபர் ட்ரம்பின் டார்கெட் வரிசையில் மிக முக்கியமான ஒன்று – ஹெச்-1பி விசா.

சில மாதங்களாக, ஹெச்-1பி விசா குறித்து எதுவும் பேசாமல்… சத்தமில்லாமல் இருந்தது ட்ரம்ப் அரசாங்கம். இப்போது நேரம் வந்துவிட்டது போலும்.

மீண்டும் ஹெச்-1பி விசாதாரர்களுக்குச் செக் வைக்க முயல்கிறது அமெரிக்க அரசு.

ஹெச்-1பி விசா |H-1B visa

2025-ம் ஆண்டு ட்ரம்பின் முதல் முயற்சி

2025-ம் ஆண்டு செப்டம்பர் 21-ம் தேதி முதல், வெளிநாடுகளில் இருந்து H-1B விசாவின் கீழ், பணியாளர்களை அழைத்து வரும் நிறுவனங்கள் அமெரிக்க அரசாங்கத்திற்கு 1 லட்சம் அமெரிக்க டாலரைச் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டது.

இந்தத் தொகை அப்போதைய இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.88 லட்சம் ஆகும்.

முந்தைய நாள் வரை 5,000 அமெரிக்க டாலரைக் கட்டினால் போதும் என்றிருந்த ஹெச்-1பி விசாவின் விலை, திடீரென்று 20 மடங்கு உயர்ந்தது.

ஹெச்-1பி விசாதாரர்களுக்கும், அமெரிக்க நிறுவனங்களுக்கும் பெரிய அதிர்ச்சியாக இருந்தது இது.

மேலும், அமெரிக்க நிறுவனங்கள் 1 லட்சம் டாலரைச் செலுத்தி ஒருவரை ஹெச்-1பி விசாவின் கீழ் அழைத்து வந்தாலும், அவர் ஓராண்டு மட்டுமே அமெரிக்காவில் வேலை செய்ய முடியும். அதன் பிறகு, நீட்டிப்பு செய்யப்பட வேண்டும். அதற்கும் கட்டணம் உண்டு.

அமெரிக்க அரசின் இந்தச் செப்டம்பர் மாத அறிவிப்பில் இது ஒரு வகை அதிர்ச்சி என்றால், ஏற்கெனவே ஹெச்-1பி விசாவில் அமெரிக்காவில் இருந்தவர்களுக்கு இன்னொரு அதிர்ச்சியும் காத்திருந்தது.

அப்போது ஹெச்-1பி விசா வைத்திருந்த ஏதேனும் நபர், அமெரிக்காவிற்கு வெளியே இருந்தால் குறிப்பிட்ட இடைவெளிக்குள் அமெரிக்கா சென்றிருக்க வேண்டும். இல்லையென்றால், அவர்களும் 1 லட்ச டாலர் ஃபீஸுடன் தான் அமெரிக்காவிற்குள் நுழைய முடியும் .

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

ஆனால், நடைமுறைக்கு வரவில்லை

இந்த நடைமுறைக்கு எதிரான வழக்கு அமெரிக்காவின் மாவட்ட நீதிமன்றத்தைத் தாண்டி, அமெரிக்காவில் ஃபெடரல் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு வந்தது.

இரு நீதிமன்றங்களுமே, “இந்தக் கட்டண உயர்வு சட்டத்திற்குப் புறம்பானது. அமெரிக்காவின் நாடாளுமன்றமான காங்கிரஸின் ஒப்புதல் இல்லை” என்று ரத்து செய்துவிட்டன.

இந்தத் தீர்ப்பு கடந்த ஜூலை மாதம் வந்தது.

தங்களுக்கு எதிராகத் தீர்ப்பு வந்துவிட்டது என்று ட்ரம்பும், அவரது அரசாங்கமும் அமைதியாகிவிடுவார்களா என்ன… வேறு முயற்சிகளைச் செய்வார்கள் தானே?

அப்படித்தான் மீண்டும் ஒரு முயற்சியைச் செய்கிறார்கள்.

ட்ரம்ப் அரசின் புதிய முயற்சி என்ன?

தற்போது அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அமெரிக்க அரசாங்கத்தின் தினசரி நாள்குறிப்பான ‘பெடரல் ரிஜிஸ்டர்’-ல் நடைமுறையை முன்மொழிந்துள்ளது.

அது… ‘அமெரிக்காவிற்கு ஹெச்-1பி விசாவின் கீழ் வெளிநாட்டுப் பணியாளர்களை அழைத்து வரும் அமெரிக்காவில் இருக்கும் நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு 1,03,265 அமெரிக்க டாலரைச் செலுத்த வேண்டும்.

இந்தத் தொகை அமெரிக்காவின் சட்டபூர்வ குடியேற்ற அமைப்பை நடத்தப் பயன்படுத்தப்படும்’.

இரண்டும் ஒரே மாதிரிதானே இருக்கிறது!

2025-ம் ஆண்டு ஹெச்-1பி விசா அறிவிப்பும், 2026-ம் ஆண்டு ஹெச்-1பி விசா அறிவிப்பும் மேலோட்டமாகப் பார்த்தால் ஒரே மாதிரிதான் தெரியும். ஆனால், இரண்டும் வேறு வேறு.

அமெரிக்க டாலர்
அமெரிக்க டாலர்

2025-ம் ஆண்டு வெளிவந்த அறிவிப்பு அதிபரின் சிறப்பு உத்தரவின் கீழ் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், தற்போதைய கட்டண உயர்வு ஹெச்-1பி விசாவிற்கான கட்டாயக் கட்டணமாக ‘முன்மொழியப்பட்டுள்ளது’. இங்கே ‘முன்மொழிவு’ என்கிற வார்த்தையை நன்கு கவனிக்க வேண்டும்.

அதாவது இது அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் முன்மொழிவு மட்டுமே. இது குறித்த மக்களின் கருத்திற்குப் பின், இது நடைமுறையாக மாறுமா… இல்லையா என்பது முடிவு செய்யப்படும்.

2025-ம் ஆண்டு கட்டண உயர்வு அதிபரின் சிறப்பு உத்தரவின் கீழ் கொண்டுவரப்பட்டதால் தான், நீதிமன்றங்களில் அது சவால்களைச் சந்தித்தது. அதனால், இந்த ரூட்டைப் பிடித்துள்ளது அமெரிக்க அரசாங்கம்.

ஏன் ஹெச்-1பி விசாவில் இவ்வளவு பிரச்னைகள் நடக்கிறது?

ஹெச்-1பி வேலைக்கான தற்காலிக விசா ஆகும். இந்த விசாவின் கீழ், மிகவும் முக்கிய மற்றும் ஸ்பெஷலான திறன்களைக் கொண்ட பணியாளர்களை நிறுவனங்கள் அழைத்து வரும்.

இவர்கள் பெரும்பாலும் ஐ.டி, இன்ஜினீயரிங், மருத்துவம், அறிவியல், கணிதம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

அமெரிக்கர்கள் இந்தத் துறை வேலைகளில் அதிக சம்பளம் எதிர்பார்ப்பார்கள். ஆனால், பிற நாட்டினர் அப்படி இல்லை. இதனால், அமெரிக்க நிறுவனங்கள் 5,000 அமெரிக்க டாலரைக் கொடுத்து, வெளிநாட்டுப் பணியாளர்களைக் குறைந்த சம்பளத்திற்கு அழைத்து வந்துவிடுகிறது. இதனால், அவர்களுக்கு லாபம்.

ஆனால், அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புச் சந்தை பாதிக்கப்படுகிறது.

ட்ரம்ப்
ட்ரம்ப்

‘Make America Great Again’ என்கிற முழக்கத்துடன் தான் ட்ரம்ப் அதிபர் நாற்காலியைப் பிடித்துள்ளார்.

அவருக்கு அமெரிக்கர்களுக்கு அனைத்து வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்கிற எண்ணம் உண்டு.

இதனால் தான், அமெரிக்கர்களின் நலனுக்காக இந்தத் திட்டத்தைக் கொண்டுவர மீண்டும் மீண்டும் துடிக்கிறார்.

அமெரிக்காவின் தரவுகளின்படி, 2025 மற்றும் 2026 காலக்கட்டங்களில் இதுவரை 2.70 லட்சம் பேர் ஹெச்-1பி விசா பெற்றுள்ளனர், இந்த விசாவிற்கு மாற்றப்பட்டுள்ளனர், விசாவின் தொடர்ச்சியில்… இருக்கின்றனர்.

ஆக, ட்ரம்ப் குறி வைப்பது இந்த 2.70 லட்ச வேலைவாய்ப்புகளையே தான். இந்த வேலைவாய்ப்புகள் பெரும்பாலும் அமெரிக்கர்களுக்குக் கிடைத்துவிட வேண்டும் என்கிற கணக்கில் தான் ட்ரம்பின் அனைத்து முயற்சிகளும் இருக்கிறது.

இந்தியாவிற்கு என்ன பாதிப்பு?

2024 நிதியாண்டின் அமெரிக்காவின் தரவுகளின்படி, ஹெச்-1பி விசாவை 71 சதவிகித இந்தியர்கள் பெற்றுள்ளனர்.

சீனர்கள் 11.7 சதவிகிதம் பெற்றுள்ளனர். பிற நாடுகள் எல்லாம் ஒரு சதவிகிதம் அல்லது ஒன்றுக்கும் குறைவான சதவிகிதத்திலேயே இந்த விசாவைப் பெற்றிருக்கின்றனர்.

இந்தியர்கள் தான் இதுவரை இந்த விசாவை அதிகம் பெற்றிருக்கின்றனர்.

இந்தக் கட்டணம் அமலுக்கு வந்தால், பல இந்தியர்களின் அமெரிக்க கனவு கனவாகவே மாறிவிடக் கூடிய நிலைக்கூட ஏற்படலாம்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

மேற்கு வங்க விநோதம்: மாணவர்களே இல்லாத 4133 பள்ளிகளில் பணியாற்றும் 19 ஆயிரம் ஆசிரியர்கள்?

மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள பள்ளிகளின் நிலை குறித்த விபரங்களை...

சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள்: “நிரூபணமான போலி எண்கவுண்டர்; CBI விசாரணை தேவை" – நயினார் நாகேந்திரன்

கர்நாடகாவில் 3 தமிழர்கள் கர்நாடக வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக...

'தவெக எம்.எல்.ஏ சொன்ன வார்த்தை; அடிக்க பாய்ந்த திமுக எம்.எல்.ஏக்கள்?' – அவையில் கடும் அமளி!

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கையின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில்...

"சேகர் பாபு மீது எனக்கு கோபம் இல்லை; ஆனால் வருத்தம்…" – என்ன சொல்கிறார் உதயநிதி?

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கும்...