தேமுதிக நிறுவனரும், நடிகருமான மறைந்த விஜயகாந்தின் 74-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் அரசியல் தலைவர்கள் பலரும் அவரை நினைவுகூர்கின்றனர்.
அந்தவகையில் முதலமைச்சர் விஜய் வெளியிட்டிருக்கும் பதிவில், “மனிதநேயம், துணிச்சல், தன்னலமற்ற சேவை ஆகியவற்றை அடையாளமாகக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எனது புகழ் வணக்கங்களைச் செலுத்துகிறேன்.
திரைத்துறையில் தனக்கெனத் தனி முத்திரை பதித்ததோடு, அரசியலில் மக்கள் நலனை முன்னிறுத்திய தலைவராகவும் திகழ்ந்து, ஏழை, எளிய மக்களின் மீது அன்பும், அக்கறையும் கொண்டு கொடையுள்ளத்தோடு உதவிய புரட்சிக் கலைஞரின் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்” என்று நினைவுகூர்ந்திருக்கிறார்.
திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் பதிவில், “ஏழை மக்களின் மேல் கொண்ட அளவற்ற அன்பால் அவர்களின் நெஞ்சத்தில் நீங்காத நினைவாய் வாழும் எனது அருமை நண்பரும் தே.மு.தி.க. நிறுவனருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் இன்று!

அவரின் கனவுகளை நனவாக்க உழைக்கும் தே.மு.தி.க. தோழர்களுக்கும் அவர்களை வழிநடத்தும் அன்புச் சகோதரி திருமதி. பிரேமலதா அவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். கேப்டன் அவர்களின் புகழ் நீடுவாழ்க!” என்று பதிவிட்டிருக்கிறார்.




