25
August, 2026

A News 365Times Venture

25
Tuesday
August, 2026

A News 365Times Venture

எப்போது தான் நிற்கும் பெண்கள் குறித்த இந்த அருவருக்கத்தக்க பேச்சுகள்?!

Date:

உதயநிதி ஸ்டாலின் – தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி தலைவர், தமிழ்நாட்டின் முன்னாள் துணை முதலமைச்சர்,

நயினார் நாகேந்திரன் – தமிழ்நாட்டின் பாஜக மாநிலத் தலைவர்,

சி.வி.சண்முகம் – தமிழ்நாட்டின் முன்னாள் சட்டத்துறை அமைச்சர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்.

இங்கே குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு பெயரும், பதவிகளும் எளிதாக கடந்தபோய் விடக்கூடியது அல்ல.

இவர்கள் சார்ந்த இயக்கங்கள் இன்றோ, நேற்றோ தோன்றியதும் அல்ல. இவர்களும் சமீபத்தில் அரசியலுக்குள் வந்த நபர்களும் அல்ல. உதயநிதியின் அரசியல் வயது கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் தான் என்றாலும், அவரது குடும்பத்தின் அரசியல் வயது 75 ஆண்டுகளுக்கும் மேலே.

தஞ்சாவூர் ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின்

இத்தனை பட்டியலும் இங்கே அடுக்கியிருப்பதற்கு காரணம் உங்களைப் பற்றி மக்களுக்கு தெரிவிப்பதற்கு அல்ல… உங்களை உங்களுக்கே நியாபகப்படுத்துவதற்காக.

ஒரு பெண்ணை ஆபாசமாக பேசிவிட்டு எளிதாக எப்படி உங்களால் கடந்துவிட முடிகிறது?

பொதுவெளியில் தூர்வாரப்பட ஏகப்பட்ட பிரச்னைகள் குவிந்து கிடக்கின்றது. அந்தக் குவியல் மீது ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக குப்பைகள் கூடிக்கொண்டு போகிறது.

இதை விட்டுவிட்டு ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் செல்வது அழகல்ல.

ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை மீது சேற்றை அள்ளி பூசியதாக நினைத்து, நீங்கள் உங்கள் மீதே சேற்றை அள்ளி பூசிக்கொண்டீர்கள் உதயநிதி.

வீடு தொடங்கி அரசியல் மேடை வரை அனைத்து இடங்களிலும் பெண்கள் ‘இன்னும்’ கிள்ளுக்கீரையாகவே இருக்கின்றனர் போலும். அதனால் தான், அவ்வளவு எளிதாக பெண்களை ஆபாசமாக பேசிவிட முடிகிறது.

‘இது திராவிட மண்’, ‘இது பெரியாரின் மண்’ – இது தான் திமுகவின் ஒவ்வொரு மேடைகளிலும் முழங்கப்படும் டீஃபால்ட் வசனம்.

பெரியார் உங்களுக்கு சொல்லி தந்தது இது தானா? இதை தான் உங்களது திராவிட மாடல் குறிக்கிறதா?

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக அதிமுகவின் முகமாகவும், பொதுச்செயலாளராகவும் விளங்கியவர் ஜெயலலிதா. தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆறு முறை இருந்திருக்கிறார் ஜெயலலிதா.

அந்தக் கட்சியில் இருந்து வந்தவர் தான் சி.வி.சண்முகம்.

சி.வி.சண்முகம்
சி.வி.சண்முகம் | அதிமுக

ஜெயலலிதா இருந்த நேரத்தில், சி.வி.சண்முகம் இப்படியொரு வார்த்தையைப் பேசியிருக்க முடியுமா? பேசியிருந்தால் அவர் அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்க முடியுமா என்ன?

ஒரு நடிகை என்றால் எளிதாக விமர்சிக்கப்படக் கூடியவரா? அவரைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசிவிடலாமா?

நயினார் நாகேந்திரனை எடுத்துகொண்டால், அவரும் இன்னொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்து தான் பேசியிருக்கிறார். இங்கே உள்ள தனிப்பட்ட வாழ்க்கை என்ற ஒன்று உண்டு.

நீங்கள் அனைவரும் அரசியல்வாதிகள் என்பதை அவ்வப்போது மறந்துவிடுகிறீர்கள் போலும். தமிழ்நாட்டின் நலன் சார்ந்து, தமிழ்நாட்டின் பிரச்னை சார்ந்து, அரசியல் சார்ந்து சக அரசியல்வாதியை எவ்வளவு வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்.

அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பார்க்க, தவறாக இருந்தால் அதை சரிசெய்ய… விமர்சிக்க அவர்களது குடும்பத்தினரும், நண்பர்களும் இருக்கிறார்கள். அதனால், அரசியல்வாதிகள் அரசியல் செய்யும் வேலையை மட்டும் பார்ப்பது மிக நல்லது.

பெண்கள் விண்வெளிக்கே சென்றுவிட்டார்கள் என்று பெருமை பீற்றிக்கொள்ளும் இந்தக் காலத்திலும் இன்னும் ஏன் பெண் சுதந்திரம், பெண் பாதுகாப்பு என்கிற பேச்சுகள் அடிபடுகிறது என்பது இப்போது அனைவருக்கும் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

விண்வெளிக்கே சென்றாலும் அவளை உடல்ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் ஆபாசமாக பேசி பேசி அவளை மீண்டும் அடுப்பறைக்குள் சுருக்குவதற்கான வேலைகள் தெரிந்தோ, தெரியாமலோ இன்னும் இந்தச் சமூகத்தில் நடந்து கொண்டே இருக்கின்றன.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

தவெக ஆட்சி அமைந்ததில் இருந்து பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன… பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார்… பல இடங்களில் திமுக இது குறித்து பேசிக்கொண்டே இருக்கிறது.

பெண்ணிற்கு பாலியல் குற்றங்கள் நடப்பது மட்டும் பெண்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை. இது மாதிரியான பேச்சுவார்த்தைகளும் பெண்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் தான்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு பாலியல் குற்றங்கள் நடக்கும் போதும், உதயநிதி ஸ்டாலின், நயினார் நாகேந்திரன், அதிமுகவில் இருந்து கண்டன அறிக்கைகள் தவறாமல் வெளிவருகின்றன.

அந்தப் பாலியல் குற்றவாளிகளுக்கு சற்றும் சளைத்தது அல்ல பெண்கள் மீதான உங்கள் அருவறுக்கத்தக்க பேச்சுகள்.

‘தலைவன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே’ என்பது எந்த விஷயத்திற்குப் பொருந்துகிறதோ, இல்லையோ இந்த விஷயத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறது.

உதயநிதி அப்படி பேசவில்லை… கட் காபி பேஸ்ட் செய்து அந்தப் பேச்சை திரித்திருக்கிறார்கள் என்று சோஷியல் மீடியாக்களில் ஏகப்பட்ட முட்டுகள்.

அதற்கான தகுந்த சாட்சி உங்களிடம் இருக்கிறது.

இது நவீன யுகம். தலைவன் தப்பு செய்தால் தொண்டர்கள் ஆகிய நாங்கள் அதை தட்டிக் கேட்போம் என்கிற நிலைபாட்டை மக்கள் ஏன் எடுக்கக்கூடாது.

பெண்கள்
பெண்கள்

ஆம்… உங்கள் தலைவர் தப்பு செய்திருக்கிறார். அதை ஒப்புக்கொள்ளுங்கள். அவரிடம் உரிமையுடன் சண்டை போடுங்கள். அவருக்கு முட்டுக்கொடுப்பதன் மூலம், அந்தத் தவறில் நீங்களும் உங்களை இணைத்துக்கொள்ளாதீர்கள்.

அரசியல் தலைவர் என்பவர் தன் கட்சி ஆட்சியைப் பிடிக்க வேண்டும். பதவியில் அமர வேண்டும். தனக்கு எதிராக இருப்பவரை கொச்சையாக விமர்சனம் செய்ய வேண்டும் என்பதில்லை.

அரசியல் தலைவருக்கான முதல் லட்சணமே – பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டும் என்பதாகும். இந்தப் பாலப் பாடத்தையே தான் பவள விழா, பொன்விழா கண்ட இயக்கங்கள் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை என்றால், எப்போது கற்றுக்கொள்ளும்?

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

மேற்கு வங்க விநோதம்: மாணவர்களே இல்லாத 4133 பள்ளிகளில் பணியாற்றும் 19 ஆயிரம் ஆசிரியர்கள்?

மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள பள்ளிகளின் நிலை குறித்த விபரங்களை...

சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள்: “நிரூபணமான போலி எண்கவுண்டர்; CBI விசாரணை தேவை" – நயினார் நாகேந்திரன்

கர்நாடகாவில் 3 தமிழர்கள் கர்நாடக வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக...

H-1B விசாவிற்கு சோதனை மேல் சோதனை; மீண்டும் 1 லட்சம் டாலர் கட்டணமா? புது ரூட்டில் ட்ரம்ப் அரசு

சட்டவிரோதக் குடியேற்றம், உலக நாடுகளின் மீது வரி விதிப்பு... என்கிற அமெரிக்க...

'தவெக எம்.எல்.ஏ சொன்ன வார்த்தை; அடிக்க பாய்ந்த திமுக எம்.எல்.ஏக்கள்?' – அவையில் கடும் அமளி!

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கையின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில்...