கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை மீண்டும் நிராகரித்திருப்பதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும் அளவுக்கு மக்கள் தொகை இல்லை என்றும் மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் அமைவதால் பயண நேரம் குறைய வாய்ப்பில்லை என்றும் இரண்டாவது முறையாக மத்திய அரசு கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை மீண்டும் நிராகரித்திருக்கிறது.
இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டிருக்கும் பதிவில்,”
மோடி அரசின் இந்த மாற்றாந்தாய் மனப்பான்மை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!
ஒவ்வொரு ஆண்டும் கோவை மற்றும் மதுரை மெட்ரோ திட்டங்களை நிராகரிக்க அதே பழைய ரீலைத் தான் சுற்றுகிறார்கள்… எந்த மாற்றமும் இல்லை!
இதுதான் பழைய ரீல்:
1. பழைய கணக்கெடுப்பு சாக்கு: 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாமல், 14 ஆண்டுகள் பழமையான 2011 கணக்கீட்டைப் (கோவை 15.84 லட்சம், மதுரை 15 லட்சம்) பிடித்துக்கொண்டு 20 லட்சம் மக்கள் தொகை இல்லை எனத் திட்டம் நிராகரிக்கப்படுகிறது.
2. இரட்டை நிலைப்பாடு: ஆக்ரா, போபால், பாட்னா, இந்தூர் போன்ற நகரங்களுக்கு மெட்ரோ வழங்கிவிட்டு, தென்னகத்தின் முக்கியத் தொழில் மற்றும் சுற்றுலா நகரங்களான கோவை & மதுரைக்கு மட்டும் BRTS-ஆ?

3. வளர்ச்சிப் புறக்கணிப்பு: மிதக்கும் மக்கள் தொகை (Floating Population) மற்றும் நகர்ப்புற அதிவேக வளர்ச்சியை முற்றிலுமாக புறக்கணிப்பது எந்த விதத்தில் நியாயம்?
பழைய தரவுகளைக் காட்டி தமிழக நகரங்களின் வளர்ச்சியைத் தடுப்பதை நிறுத்துங்கள்!
கோவை மற்றும் மதுரைக்கு உடனடியாக மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கிடுக!” என்று மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.




