டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்துக்கு ஆதரவாக தி.நகர் பாலன் இல்லத்தில் கடந்த 6 நாட்களாக நடந்து வந்த காத்திருப்புப் போராட்டம் நேற்று நள்ளிரவில் கடும் வாக்குவாதத்தில் முடிந்திருக்கிறது. டெல்லி போராட்டம் சுமுகமாக முடிந்த நிலையில் பாலன் இல்ல போராட்டத்தில் பிரச்னை எழ காரணம் என்ன?
ஜூலை 20 ஆம் தேதி டெல்லியில் காவல்துறையினர் போராடிய மாணவர்கள் மீது தடியடி நடத்தியிருந்தனர். அன்று மாலை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே ஒரு சில மாணவர்கள் கூடி போராட்டத்தை தொடங்கினர். ஆனால், காவல்துறையினர் அனுமதி இல்லாமல் பொதுவெளியில் போராடக் கூடாது எனக் கூறி அவர்களை கலைத்தனர். இதனைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராடும் மாணவர்களுக்கு இடம் கொடுப்பதாக அறிவித்தது.
அன்று இரவிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பாலன் இல்லத்தில் காக்ரோச் ஜனதா பார்ட்டி என்ற பெயரில் 50 பேர் கூடினர். காலையிலிருந்து மதியம் வரை 50 பேர் மட்டுமே கோஷம் போட்டு கொண்டிருப்பர். மாலை 4 மணியிலிருந்து மேலும் மாணவர்கள் பாலன் இல்லத்தை நோக்கி வருவர். நள்ளிரவு வரை போராட்டம் ஆக்டிவாக நடக்கும். இடையில் அரசியல் கட்சியினர், பிரபலங்கள் வந்து தங்களின் ஆதரவை தெரிவித்துவிட்டு செல்வார்கள். இதுதான் அந்த போராட்டத்தின் பாணி.

காக்ரோச்களுடன் ஆரம்பத்தில் SFI – DYFI போன்ற மாணவ அமைப்பினரும் இணைந்து போராடினர். ஆனால், அவர்களுக்கு காக்ரோச் போராட்டத்தில் உடன்பாடில்லை. ‘ஒரு கட்சி அலுவலகத்தில் காம்பவுண்ட்டுக்குள் உட்காந்து போராடுவதா? பொதுவெளியில் போராடி மக்களை கவனிக்க வைக்க வேண்டும்’ என முடிவெடுத்து அவர்கள் போராட்டத்தின் ஆரம்பத்திலேயே பாலன் இல்லத்திலிருந்து வெளியேறினர். எழும்பூரில் பேரணி, சாலைமறியல் என போராடி காவல்துறையின் அனுமதியை வாங்கி ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே கடந்த இரண்டு நாட்களாக போராடி வந்தனர். நேற்று தர்மேந்திர பிரதான் பதவி விலகி டெல்லியில் போராட்டம் முடிந்தவுடன், ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகேயும் போராட்டத்தை சுமுகமாக முடித்துக் கொண்டனர்
‘நம்முடைய இலக்கு நீட் விலக்கு என்பதுதான். ஆனால், பெருவாரியான மக்கள் ஒரு இலக்கை முன்வைத்து போராடி வென்றிருக்கின்றனர். அதற்கு மதிப்பளிக்க வேண்டும். நம்முடைய நீட் விலக்கு போராட்டங்கள் அடுத்தடுத்து தொடரும்’ எனக் கூறி எழும்பூரில் வெற்றிப் பேரணி சென்று கேக் வெட்டி காவலர்களுக்கு ரோஜாப்பூ கொடுத்து பிரச்னை எதுவுமின்றி முடித்துவிட்டனர். மாணவ அமைப்புகள் ஒருங்கிணைத்த போராட்டம் என்பதால் அனைவரும் ஒருமித்த கருத்தின் கீழ் ஒப்புக்கொண்டு விடைபெற்றனர்.
அதேநேரத்தில் பாலன் இல்லத்தில் நிலைமை வேறாக இருந்தது. நேற்று பாலன் இல்லத்தில் பல இலக்குகளையும் நோக்கங்களையும் கொண்ட குழுக்கள் உருவாகியிருந்தது. பிரதான் பதவி விலகிய பிறகும் நீட்டை ரத்து செய்தால்தான் இங்கிருந்து நகர்வோம் என ஒரு குழு அறிவித்தது. அதில் உடன்பாடு இல்லாதவர்கள் அப்போதே கலைந்து செல்ல தொடங்கினர். ஒரு குழு ‘வாங்க மெரினாவுக்கு போவோம்’ என உணர்ச்சியை தூண்டும் வகையில் பேசிக்கொண்டிருந்தது. இன்னொரு குழு அதெல்லாம் சரிப்பட்டு வராது இங்கேயே போராடுவோம் என்றது. இதனால் மாலை 6 மணிக்கே போராட்ட பந்தலுக்குள் இரண்டு குழுக்கள் இடையே கடும் வாக்குவாதம் எழுந்தது. மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்திதான் அந்த சண்டையை போராடி சமாதானப்படுத்தினார்.
இடையில் அமைச்சர் ராஜ்மோகன் போராட்ட பந்தலுக்கு பேச வந்தார். அவரையும் ஒரு குழு பேசவே விடவில்லை. கத்தி கூச்சல் போட்டு அவரை வெளியேற்றும் தொனியிலேயே நடந்துகொண்டது. போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்கள் அந்த மாணவர்களை ‘அப்படியெல்லாம் செய்யக் கூடாது’ என தடுக்க நினைத்தும் முடியவில்லை.
இரவு 8 மணிவாக்கில் பாலன் இல்லத்தை சுற்றிய வளாகத்தில் போராட்டக்காரர்கள் 3-4 குழுக்களாக பிரிந்து தனித்தனியாக விவாதிக்க ஆரம்பித்துவிட்டனர். ஒவ்வொரு குழுவின் நோக்கமும் ஒவ்வொன்றாக இருந்தது. காம்பவுண்ட்டுக்கு வெளியே போலீசாரும் தயாராக இருந்தனர். காம்பவுண்ட்டை விட்டு கூட்டம் வெளியே வரும்பட்சத்தில் கைது செய்ய தயாராக இருந்தனர். ஒரு குழு தமிழக அரசையும் முதல்வர் விஜய்யையும் குறிவைத்து மட்டுமே கருத்துகளை பரிமாறிக் கொண்டிருந்தது.




.
இந்தப் போராட்டம் இப்படியே தொடர்ந்தால் சுமுகமாக முடிய வாய்ப்பில்லை என்பதை உணர்ந்ததால் போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்களே இரவு 11 மணிவாக்கில் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தனர். அதன்பிறகும் வாக்குவாதம் ஓயவில்லை. நீட் ரத்தை வாங்காமல் எப்படி போராட்டத்தை முடிப்பீர்கள் என போராடியவர்கள் தங்களுக்குள்ளாகவே மாறி மாறி சண்டையிட்டுக் கொண்டனர். இரவு 3 மணி வரைக்கும் இந்த வாக்குவாதம் போயிருக்கிறது. இறுதியாக, ‘நீட் ரத்தை வலியுறுத்தி ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவோம்’ எனக் கூறி முடித்து வைத்திருக்கின்றனர். அதன்பிறகுதான் பாலன் இல்லம் காலியாகியிருக்கிறது.
SFI – DYFI போன்ற மாணவ அமைப்புகள் ஒரே நோக்கத்தை கொண்டு ஒருங்கிணைந்த தலைமையோடு முறையாக போராட்டத்தை நடத்தி சுமுகமாக முடித்திருந்தனர். பாலன் இல்லத்தில் அது நடக்கவில்லை. அங்கே வெவ்வேறு நோக்கங்களோடு கூடிய குழுக்கள் முறையான ஒருங்கிணைப்பின்றி கூடியதால், வெற்றிக் கொண்டாட்டத்தோடு முடிய வேண்டிய போராட்டம் சண்டையோடு முடிந்திருக்கிறது.




