ஒட்டன்சத்திரம் தொகுதியில் தொடர்ந்து ஆறு முறை வெற்றி பெற்று அமைச்சராக இருந்தார், சக்கரபாணி. தொகுதி முழுவதும் மக்களுக்கான அடிப்படை வசதிகள், சாலை வசதிகள் என எல்லாவற்றையும் செய்து தொகுதியைத் தன் கன்ட்ரோலில் வைத்திருக்கிறார். இவருக்கு எதிராக அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் விடியல் சேகர் போட்டியிட்டார். தொடர்ந்து ஆறு முறை ஒரே தொகுதியில் வெற்றி பெற்றவருக்கு எதிராக தொகுதிக்கு அறிமுகமே இல்லாத நபரை வேட்பாளராக அறிவித்ததும் அதிமுக-வினரே கடும் அதிருப்திக்கு சென்று விட்டனர்.
இதற்கு காரணம் கடந்த தேர்தலின் போது 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றிருந்தார் சக்கரபாணி. இந்த முறை கனிம வள சம்பந்தமாக சக்கரபாணிக்கு எதிர்ப்பு அலை வீசியதோடு, தவெக-வின் வரவும் திமுக-வின் ஓட்டுகளை சிதறடிக்கும் என்பதால் அதிமுக தரப்பில் வலுவான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என அக்கட்சி நிர்வாகிகள் எதிர்ப்பார்த்த நிலையில், த.மா.க-விற்கு ஒதுக்கியதால் அக்கட்சியினர் தொகுதியில் வேலையே செய்யவில்லை.
சக்கரபாணி தரப்பில் தொகுதி மக்களை நன்கு கவனித்ததாகச் சொல்லப்படுகிறது. அதுவும் திமுக எளிதில் வெற்றிக் கோட்டை தொட வித்திட்டிருக்கிறது. இதை தாண்டி ஒரே தொகுதியில் தொடர்ந்து ஏழு முறை வெற்றி பெற்றதோடு, எதிர்க்கட்சி வேட்பாளர்களின் டெபாசிட்டையும் காலி செய்திருக்கிறார் சக்கரபாணி.




