2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றன. கொளுத்தும் கோடை வெப்பத்தையும் தாண்டி தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.
பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து டெல்லியில் இருந்து அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தமிழ்நாட்டை நோக்கிப் படையெடுத்து முகாமிட்டு வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷா ஈரோட்டில் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட இருக்கிறார். அதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
அவரின் பயணத்திட்டம் குறித்து தெரிவித்த பா.ஜ.க நிர்வாகிகள், ” பா.ஜ.க – வின் சிட்டிங் தொகுதியான மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கிருத்திகாவை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். காலை 9.45 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் தாமரைப்பாளையம் லோட்டஸ் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு வருகைத் தர இருக்கிறார். காலை 10 மணியளவில் கார் மூலம் சிவகிரி அரசு மருத்துவமனை பகுதிக்குச் சென்று ரோடு ஷோவில் பங்கேற்கிறார். இதனைத் தொடர்ந்து காலை 10.15 மணியளவில் தீரன் சின்னமலை சிலை முன்பு வேட்பாளருக்கு ஆதரவாக உரையாற்ற இருக்கிறார்” என்றனர்.




