தேனி மாவட்ட திமுக மற்றும் விசிக கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பிரசாரம் செய்தார்.
அக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “இது வெறும் தேர்தல் களம் மட்டும் அல்ல போர்க்களம். தமிழ், தமிழினம், தமிழ்நாடு என்கிற சொல்லைக் கேட்டால் நசுக்குகிற கூட்டம் உள்ளது.
நம்முடைய குரல்கள் நாடாளுமன்றத்தில் கேட்கக் கூடாது என்று முயற்சி செய்கிறார். தொகுதி மறுவரையறை மூலம் நமக்கு வர வேண்டிய தொகுதிகளைக் குறைத்து உள்ளார்கள்.
தமிழ்நாடு முழுக்க கருப்புக் கொடி கட்டி நமது எதிர்ப்பைக் காட்டியுள்ளோம். முதலமைச்சராகிய என்னுடைய எதிர்ப்பு தமிழக மக்களின் எதிர்ப்பு. தமிழர்களை அவமதிப்பது மட்டுமே நோக்கமாக வைத்து பேசுகிறார் நாடாளுமன்றச் சபாநாயகர் ஓம் பிர்லா. அவர்களுக்குத் தெளிவாகச் சொல்கிறேன். இந்த மண்ணில் சமத்துவம், சமூக நீதி பொதுவுடமை கருப்பு சிவப்பு நிற கொடிகள்தான் பறக்கும்.
திமுக இருக்கும் வரை காவிக் கொடி ஒருபோதும் இங்கே பறக்காது. தன்மானம் உள்ள தொண்டர்கள் இங்கே காவிக் கொடியைப் பறக்க விட மாட்டார்கள். தமிழ்நாடா டெல்லியா? இந்தப் போரில் பழனிசாமியின் அடிமை அதிமுக துரத்த பட வேண்டும்.
தொடர்ந்து தேனி மாவட்ட போடிநாயக்கனூர் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை அறிமுகம் செய்தார்.
அப்போது பேசிய அவர், “விசுவாசம் என்று சொல்லுகிற அளவுக்கு ஜெயலலிதா நன்மதிப்பைப் பெற்றவர். உலக மகா துரோகியை உலகிற்கு அடையாளம் காட்டியவர் ஓபிஎஸ். தமிழ்நாட்டிற்குத் துரோகம் செய்கிற, பாஜகவிற்கு வாக்கு கேட்கிறார் பழனிசாமி, தமிழ்நாட்டுக்குக் கெடுதல் செய்ய ஊழல்வாதிகளை மிரட்டி ஏற்பட்ட கூட்டணிதான் என்டிஏ கூட்டணி
தமிழ்நாட்டிற்குச் செய்துள்ள ஒரே திட்டம் சொல்லுங்கள் என மோடியிடம் கேட்டேன். பதில் வரவில்லை. தமிழ்நாட்டிற்குச் செய்த திட்டத்தைப் பட்டியலிடுங்கள் என எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டேன் அதற்கும் பதில் இல்லை.
சசிகலா காலில் விழுந்து அவர் காலை வாரி விட்டு துரோகம் செய்தவர் இப்போது ஒட்டு மொத்த தமிழ்நாட்டுக்கும் துரோகம் செய்துள்ளார். தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்து சிறை சென்றவர் கூட்டணி வைத்தால் தூக்கு மாட்டிக்கொள்வேன் எனக் கூறியவர் இப்போது அவருடன் சேர்ந்து உள்ளார்.
தமிழ்நாட்டிற்கு நிதி கொடுக்காமல் இருந்தாலும் எடப்பாடி பழனிசாமிக்குக் கவலை இல்லை. 100 நாள் வேலை திட்டத்தை நிறுத்தினாலும் கவலை இல்லை. தொகுதி மறு சீரமைப்பு கொண்டு வந்த பாஜகவை எதிர்த்து பேச முடியவில்லை. தமிழ்நாடு மீது கத்தி வைக்கப்படுகிறது எனத் தெரிந்தும் தேர்தல் பிரசாரத்தைப் பிறகு பார்த்து கொள்ளலாம் எனத் திமுக எம்.பி-களை டெல்லிக்கு அனுப்பியுள்ளேன்.

பழனிசாமியின் அதிமுகவுக்கும், பாஜகவுக்கு நீங்கள் அளிக்கின்ற வாக்கு தமிழ்நாட்டை நாசம் செய்ய ஒரு வாய்ப்பு. தமிழ்நாட்டைச் சுத்துகின்ற பாஜக என்னும் பருந்தை விரட்டி அடிக்க வேண்டும். டெல்லியின் ரிமோட் கண்ட்ரோலுக்கு தமிழ்நாட்டு அடிமைகள் ஆளக்கூடாது. அதனால்தான் நான் அடிக்கடி கூறி வருகிறேன். இது தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்குமான போட்டி. இப்போது தான் ஒரு நல்ல செய்தி வந்தது நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவறையரை கொண்டு வந்த தீர்மானம் தோல்வி அடைந்து நாம் வெற்றி பெற்றுள்ளோம். 200 தொகுதிகள் மேல் வெல்லுவோம் நாம் தொடர்ந்து உழைப்போம் சரித்திர வெற்றி பெறுவோம்” என்றார்.




