சட்டமன்றக் கூட்டத்தொடர் நடந்து முடிந்திருக்கும் நிலையில், அவையில் முதல்வர் விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான திமுக எம்.எல்.ஏ-க்கள் வெளிநடப்பு செய்தனர்.
அதைத் தொடர்ந்து சட்டமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், “பிரசாரங்களில் பேசுவது போல டைலாக் பேசிக்கொண்டிருந்தார். அப்போது உண்மைக்கு மாறான தகவல்களை அவையில் பதிவு செய்யத் தொடங்கினார். நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஆதரத்துடன் பேசுங்கள் என்பதைக் குறிப்பிடும் பாயிண்ட் ஆஃப் ஆர்டரில் பதிலளிக்க அனுமதி கேட்டோம்.
அவரின் விமர்சனம் எல்லை தாண்டி போனபோதும் சபாநாயகர் முதல்வர் விஜய் கொண்டுவந்திருந்த ஸ்க்ரிப்டை முழுவதுமாகப் பேச அனுமதித்தார். அதாவது ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்படி ஒரு வசனம் பேசி முடியும்வரை யாரும் பேசக் கூடாதோ அப்படி ஒரு நிகழ்வை அவையில் நடத்தினர்.
நேற்று நான் கேட்ட எந்தக் கேள்விக்கும் அவர் பதிலளிக்கவே இல்லை. ஊடகத்தினரிடமும் எதிர்க்கட்சிகளிடமும் அவர் பதில் சொல்வதே இல்லை. முதல்வராக மக்களின் கேள்விக்குப் பதிலளிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
எல்லாவற்றுக்கும் தி.மு.க மீது பழிபோடுவதையே வழக்கமாக வைத்திருக்கின்றனர். ஆளுநர் வந்தபோது இரண்டு முறை தேசிய கீதம் பாடப்பட்டது ஏன்? இதில் என்ன உங்களுக்குள் உடன்பாடு? என்ற கேள்விக்கு, ‘குடியரசுத் தலைவர் வந்தபோது தி.மு.க அரசு இரண்டு முறை தேசிய கீதம் பாடப்பட்டது’ எனப் பதில் சொல்கிறார்.
குடியரசுத் தலைவருக்கென ஒரு புரோட்டோகால் இருக்கிறது. ஆனால் ஆளுநருக்கு அப்படி இல்லை என்பது முதல்வருக்குத் தெரிந்திருக்க வேண்டும். 41 லட்சம் மாணவர்கள் பயனடைந்த நான் முதல்வன் திட்டம் முடக்கம், மின்வெட்டு பிரச்னை என எதற்கும் சரியான பதில் இல்லை.

‘விவசாயிகள் யாருடைய பின்புலத்திலோ போராட்டம் நடத்துகிறார்கள்’ என விவசாயிகளின் போராட்டத்தைக் கொச்சைப் படுத்துகிறார். சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு திமுக அரசு டிஜிபியைக் நியமிக்கவில்லை என மீண்டும் எங்களையே கை காண்பிக்கிறார். நீங்கள் வந்து என்ன கிழித்தீர்கள் என மக்கள் கேட்கிறார்கள்.
சட்டம் ஒழுங்கு, ஆளும் கட்சியினரின் அத்துமீறல்கள் என எல்லாவற்றுக்கும் ஆதாரம் கொடுத்தோம். ‘நாங்கள் யார் தயவிலும் இல்லை’ என்கிறார். அப்படியென்றால் ஏன் அ.தி.மு.க-வினரைப் பார்த்தார்? ஒவ்வொரு கட்சிக்கும் முதலில் சோஃபா போனது… அதற்குப் பின்னால் இவர் சென்றார்…
இப்போது ஒவ்வொரு அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களையும் கட்சியில் இணைத்துக்கொண்டிருக்கிறார். இதுபோல இது எந்தக் கேள்விக்கும் அவரிடம் பதில் இல்லை. ஷூட்டிங் வந்த ஒருவர் எப்படி டைலாக் பேசிவிட்டு செல்வாரோ அப்படித்தான் பேசியிருக்கிறார்.
சட்டமன்றத்தில் விசிலடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதையெல்லாம் இதுவரை பார்த்ததே இல்லை… விரைவில் சட்டமன்றத்தில் டான்ஸ் ஆட ஆரம்பித்துவிடுவார்கள் போல. முதல்வரின் உரையே 10 ரீல்ஸ்க்கான ஸ்க்ரிப்ட் போலதான் இருக்கிறது. கவனித்து பாருங்கள் உங்களுக்கே தெரியும். எல்லாம் திட்டமிட்டுதான் செயல்படுத்துகிறார்கள்.

அதனால்தான் ஒரளவுக்கு மேல் முடியவில்லை. முதல்வர் விஜய் இங்கும் நடிக்க ஆரம்பித்துவிட்டார். ஆக்ஷன், கட், ஒன் மோர் எல்லாம் இனி இருக்கும்போல. சபாநாயகரிடம், ‘நடிக்கட்டுமா?’ எனக் கேட்கிறார். சபாநாயகர் ‘ஆக்ஷன்’ என்கிறார். இவர் நடிக்கிறார். விரைவில் கேரவன், ஸ்டண்ட் மாஸ்டர், மேக்கப் ஆர்ட்டிஸ்ட் எல்லோரும் வந்துவிடுவார்கள். சட்டமன்றம் ஷூட்டிங்க் ஸ்பாட்டாக மாறிவிடும்போல.
நாங்கள் ஊழல் செய்தோம் என்றால் நிரூபித்து, நீதிமன்றம் செல்லுங்கள். ஆதாரம் இல்லாமல் பொதுக்கூட்டத்தில் பேசுவதுபோல சட்டமன்றத்தில் பேச முடியாது. இரண்டு மூன்று நாள் ரிகர்சல் செய்துவிட்டு வந்து எல்லாவற்றையும் ஒப்பித்துச் சென்றிருக்கிறார். தேர்தல் வாக்குறுதிகள் குறித்து எதையும் பேசவே இல்லை.
தி.மு.க-வின் திட்டம்தான் இப்போதுவரை தொடர்ந்துகொண்டிருக்கிறது. அவை முடிந்தபிறகும் அமைச்சர் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார். இதெல்லாம் என்ன மரபு என்றே தெரியவில்லை” எனப் பேசியிருக்கிறார்.




