தமிழக அரசியலில் ‘அமைதிப் படை’யாக அறியப்பட்டு, ஜெயலலிதாவால் மூன்று முறை முதலமைச்சர் நாற்காலியில் அமரவைக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், இன்று தனது அரசியல் வாழ்வின் மிக முக்கியமான மற்றும் ஒரு மாறுபட்ட கட்டத்தில் நிற்கிறார். 2026 சட்டமன்றத் தேர்தலில், தனது சொந்தக் கோட்டையான போடிநாயக்கனூரில் அவர் எடுத்துள்ள புதிய அவதாரம் தமிழகத்தையே உற்றுநோக்க வைத்துள்ளது.
ஓ.பி.எஸ்-ஸின் அரசியல் பயணம் கடந்த சில ஆண்டுகளில் பல அதிரடித் திருப்பங்களைக் கண்டுள்ளது. ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பி.எஸ், எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட அதிகாரப் போட்டியில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். சட்டப் போராட்டங்கள் அவருக்குச் சாதகமாக அமையாத நிலையில், தன் ஆதரவாளர்களுடன் தனி அணியாகச் செயல்பட்டார்.
“இரட்டை இலை” சின்னம் கிடைக்காத சூழலில், தனது அரசியல் இருப்பைத் தக்கவைக்க தி.மு.க-வில் இணைந்தது ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. பல தசாப்தங்களாகத் தான் எதிர்த்த அதே `உதயசூரியன்’ சின்னத்தில் இன்று அவர் களம் காண்பது, போடிநாயக்கனூர் அரசியலில் ஒரு புதிய வரலாற்று மாற்றமாகும்.
வழக்கமாக அ.தி.மு.க-வின் அசைக்கமுடியாத கோட்டையாகக் கருதப்படும் போடியில், இந்த முறை கடும் மும்முனைப் போட்டி நிலவியது. இந்த தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் 82,512 வாக்குகள் பெற்று த.வெ.க வேட்பாளர் பிரகாஷ், அ.தி.மு.க வேட்பாளர் நாராயணசாமி, நாம் தமிழர் கட்சியின் கலையரசு ஆகியோரை தோற்கடித்திருக்கிறார்.
சின்னம் மாறினாலும், போடிநாயக்கனூர் மக்கள் ஓ.பி.எஸ் மீதான தங்களின் தனிப்பட்ட விசுவாசத்தைக் கைவிடவில்லை என்பது அவர் பெற்றுள்ள வாக்குகள் மூலம் தெரிகிறது. தி.மு.க-வின் வாக்கு வங்கியும், ஓ.பி.எஸ்-ஸின் சொந்த செல்வாக்கும் இணைந்து அவரை வெற்றிபெறச் செய்திருக்கிறது.

யாரும் எதிர்பார்க்காத வகையில், தவெக வேட்பாளர் பிரகாஷ் ஓ.பி.எஸ்-ஸிற்கு கடும் சவாலை அளித்தார். இது அந்தத் தொகுதியில் இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்களின் மனநிலை மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது. ஆளுங்கட்சி கூட்டணி மற்றும் முன்னாள் முதலமைச்சரையே நெருங்கும் அளவிற்கு த.வெ.க வாக்கு பெற்றுள்ளது ஒரு முக்கிய அரசியல் நகர்வாகும்.
பாரம்பரியமாக இரட்டை இலை சின்னத்திற்கு விழும் வாக்குகள் இந்த முறை சிதறியுள்ளன. அ.தி.மு.க வேட்பாளர் நாராயணசாமி மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது, அந்தப் பகுதியில் ஓ.பி.எஸ் இல்லாத அ.தி.மு.க பலவீனமடைந்துள்ளதைக் காட்டுகிறது.
ஓ.பி.எஸ்-ஸிற்கு இது வெறும் தேர்தல் வெற்றி மட்டுமல்ல, தனது அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வாழ்வா-சாவா போராட்டமாக இருந்தது. தி.மு.க சின்னத்தில் போட்டியிட்டாலும், ‘போடியின் மைந்தன்’ என்ற பிம்பமே அவரை இப்போது வெற்றிக்கோட்டை எட்ட வைத்திருக்கிறது. எனினும், த.வெ.க-வின் அபார வளர்ச்சி மற்றும் அ.தி.மு.க-வின் வாக்குச் சரிவு ஆகியவை, வரும் காலங்களில் போடிநாயக்கனூர் தொகுதி ஒரு புதிய அரசியல் சமன்பாட்டிற்குத் தயாராகிவிட்டதை உறுதிப்படுத்துகின்றன.




