தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய் சென்னை லயோலா கல்லூரியில் வெற்றி பெற்ற சான்றிதழை வாங்கச் சென்றிருக்கிறார்.
இந்தச் சூழலில் லயோலாவில் விஜய்க்கு வகுப்பெடுத்த முன்னாள் எம்.பி.யும் லயோலாவின் முன்னாள் பேராசிரியருமான ரபி பெர்னார்டிடம் பேசினோம்.
‘’மீடியாவுக்கு வருவதற்கு முன் நான் சில காலம் லயோலா கல்லூரியில் விரிவுரையாளராகப் பணி புரிந்து வந்தேன். நான் அங்க வேலை பார்த்திட்டிருந்தப்பதான் விஜய்க்கு அங்க அட்மிஷன் போட்டாங்க. அடுத்த சில நாட்களில் ஒரு நாள் விஜய்யின் அம்மா அப்பா சூளைமேட்டில் இருந்த எங்க வீட்டுக்கு விஜயைக் கூட்டிட்டு வந்தாங்க.
அப்ப எஸ்.ஏ.சி சார் சொன்ன வார்த்தைகள் இப்பவும் நல்ல நினைவுல இருக்கு. ‘இவனுக்கு வாழ்க்கையில பெரிய பெரிய கனவுகள் இருக்கு. அதனால சிறந்த ஒரு மனிதனா இவனை உருவாக்கணும்னுதான் இங்க சேர்த்திருக்கோம். நீங்க கைடு பண்ணி வழிநடத்தணும்னு’ என் கையில விஜய் கையைப் பிடிச்சுக் கொடுத்தார்.
பிறகு அங்கேயே கொஞ்ச காலம் படிச்சார். ரொம்ப அமைதியா இருப்பார். படிச்சிட்டிருக்கிற போதே சினிமா வாய்ப்புகள் அமைஞ்சுட்டதால அதுலயும் கவனம் செலுத்தினார். முதல் படமான ‘நாளைய தீர்ப்பு’ படத்தின் ஷூட் லயோலாவில் நடந்தது. வகுப்பு முடிஞ்சதும் நேரா அங்க ஷூட்டிங் போவார்.
பிறகு நானும் அந்தக் கல்லூரியில் இருந்து வெளியில வந்துட்டேன். அதனால அதன் பிறகு தொடர்பு இல்லை. ஆனா எங்கயாச்சும் பார்த்தா என்னுடைய புரபசர்னு மரியாதையாப் பேசுவார்.
இன்னைக்கு அவர் படிச்ச, படிச்சிட்டிருக்கிற போதே முதல் படத்துல நடிச்ச அதே கல்லூரியில வெற்றிச் சான்றிதழை வாங்கி தமிழ்நாட்டின் அடுத்த முதல்வரா பதவியேற்கப் போறார்னு நினைக்கிறப்ப எனக்கு ரொம்பவும் பெருமையா இருக்கு. ” என்றார்.




