தர்மபுரியில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட விசிக தலைவர் தொல். திருமாவளவன் பேசியபோது, “நான் ஒருபோதும் கட்சியிலிருந்து யாரையும் வெளியேற்ற வேண்டும் என்று எண்ணியதில்லை. சிலர் விசிகவை எப்படியாவது சிதறடிக்க வேண்டும். பலவீனப்படுத்தி விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருந்தார்கள்.
அவர்கள் இப்போது ஏமாற்றம் அடைந்து இருக்கிறார்கள். ஒரு தம்பி கட்சியில் சேர விரும்பினால், ‘நீ இங்க வரவேண்டாம்பா. வேற ஏதாவது கட்சிக்கு வேணா போயிடுங்க. விசிகவோடு நாங்கள் நீண்ட காலம் பயணித்திருக்கிறோம். எங்களுக்காக அவர்கள் துணை நின்றார்கள். அவர்களைப் பலவீனப்படுத்த இடம் தரமாட்டோம்’ என அந்தக் கட்சி சொல்லி இருக்க வேண்டும். அதுதான் அரசியல் அறம்.
ஆனால் எங்களாலும் விசிகவைப் பலவீனப்படுத்த முடியும் என்ற நோக்கில் கட்சியில் இணைத்துக் கொண்டார்கள். நீண்ட நெடிய பாரம்பர்யம் கொண்ட இயக்கம் எடுத்த முடிவு என் இதயத்தில் முள் குத்தியதைப் போல் வலியை ஏற்படுத்தியது.
லட்சக்கணக்கான தொண்டர்கள் கொண்ட இந்த இயக்கத்தில் நூற்றுக்கணக்கான கருத்தியல் சார்ந்த படை தளபதிகள் வலிமையுடனும் பற்றுதலுடனும் இருக்கிறார்கள்” என்று பேசியிருக்கிறார்.
சட்டமன்றத் தேர்தலின்போது பனையூர் பாபுவுக்கு விசிகவில் சீட் கொடுக்கவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்த பனையூர் பாபு கடந்த ஜூன் 7 ஆம் தேதி திமுகவில் இணைந்தார். இவரைத்தான் திருமாவளவன் குறிப்பிடுகிறார் என்று அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.




