13
July, 2026

A News 365Times Venture

13
Monday
July, 2026

A News 365Times Venture

ட்ரம்பின் வலதுகரம்; ஈரான் மீதான போரின் முக்கியஸ்தர்! – திடீர் மரணமடைந்த லிண்ட்சே கிரஹாம் யார்?

Date:

குடியரசுக் கட்சியின் மூத்த தலைவரும், அதிபர் டொனால்டு ட்ரம்பின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவருமான செனட்டர் லிண்ட்சே கிரஹாம், தனது 71வது வயதில் திடீரென காலமானார். திடீர் உடல்நலக்குறைவால் அவர் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், சனிக்கிழமை மாலை அவர் உயிர் பிரிந்ததாகவும் அவரது அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஐந்தாவது முறையாக செனட் சபைக்குப் போட்டியிடத் தயாராகி வந்த நிலையில் நிகழ்ந்துள்ள கிரஹாமின் இந்த மரணம், அமெரிக்க அரசியல் வட்டாரங்களில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது அலுவலகம் X தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், “செனட்டர் கிரஹாமின் குடும்பத்தினர் இந்த நேரத்தில் பிரார்த்தனைகளுக்கு நன்றி தெரிவிக்கின்றனர். இந்த நம்பமுடியாத கடினமான காலகட்டத்தில் தங்களின் தனிமைக்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக்கொள்கிறார்கள்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் துயரச் செய்திக்கு உடனடியாக இரங்கல் தெரிவித்த டொனால்டு ட்ரம்ப், கிரஹாமை ஒரு உண்மையான அமெரிக்க தேசபக்தர் என்று புகழாரம் சூட்டியுள்ளார். தனது ‘ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில் அவர், “நான் அறிந்ததிலேயே மிகச்சிறந்த மனிதர்களில், மிகச்சிறந்த செனட்டர்களில் லிண்ட்சேவும் ஒருவர். அவர் எப்போதும் உழைத்துக்கொண்டே இருப்பார். அவர் ஒரு உண்மையான அமெரிக்க தேசபக்தர். லிண்ட்சேவின் இழப்பு பெரிதும் உணரப்படும்… மிகவும் வருத்தமளிக்கிறது,” என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

எளிய தொடக்கம் முதல் செனட் வரை…

தெற்கு கரோலினா மாகாணத்தைச் சேர்ந்த லிண்ட்சே கிரஹாமின் அரசியல் பயணம் என்பது சவால்கள் நிறைந்தது. தனது குடும்பத்தில் கல்லூரிக்குச் சென்ற முதல் நபர் அவர்தான். தெற்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் சட்டப் பட்டங்களைப் பெற்ற அவர், சுமார் ஆறு ஆண்டுகள் அமெரிக்க விமானப்படையில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

1989-ல் விமானப்படையிலிருந்து விலகி, தெற்கு கரோலினா விமான தேசியப் படையில் சேர்ந்தார். 1994-ல் அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் அவரது அரசியல் அத்தியாயம் தொடங்கியது. 1877-க்குப் பிறகு, தெற்கு கரோலினாவின் மூன்றாவது மாவட்டத்திலிருந்து வாஷிங்டனுக்கு அனுப்பப்பட்ட முதல் குடியரசுக் கட்சி உறுப்பினர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

2002-ல் முதன்முறையாக செனட் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கிரஹாம், அதன்பிறகு 2008, 2014 மற்றும் 2020 ஆகிய தேர்தல்களிலும் தொடர் வெற்றிகளைப் பதிவு செய்தார். குறிப்பாக 2008 தேர்தலில், தனது மாகாணத்தில் பத்து லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற முதல் நபர் என்ற வரலாற்றுச் சாதனையையும் அவர் படைத்தார்.

வெளியுறவுக் கொள்கையில் ஒரு ‘பருந்து’

ட்ரம்பின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில், அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளில் லிண்ட்சே கிரஹாம் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்தார். குறிப்பாக ஈரான் விஷயத்தில் அவர் மிகவும் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். ஈரானுடன் நேரடி மோதலை வாஷிங்டன் முன்னெடுக்க வேண்டும் என்று ஒரு தசாப்தத்திற்கும் மேலாக வாதிட்டு வந்த அவர், பராக் ஒபாமா ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை கடுமையாக நிராகரித்தார்.

சமீபத்தில், பிப்ரவரி 28 அன்று தொடங்கிய போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தம் குறித்தும் அவர் சந்தேகம் வெளிப்படுத்தியிருந்தார். “ஈரானுடன் நம்பகமான ஒப்பந்தத்தை எட்ட முடியுமா என்பது இனிமேல்தான் தெரியும், ஆனால் முயற்சிப்பதில் தவறில்லை,” என்று அவர் கூறியிருந்தார். இதுதவிர, உக்ரைன் போருக்கு ரஷ்யாவின் போர் இயந்திரத்திற்கு எரிபொருளாக இருப்பதாகக் கூறி, ரஷ்ய எண்ணெயை வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளையும் அவர் கடுமையாக விமர்சித்திருந்தார்.

தனது மறைவுக்கு சில நாட்களுக்கு முன்பு கூட, அவர் உக்ரைன் தலைநகர் கீவிற்குச் சென்று அதிபர் ஜெலென்ஸ்கியைச் சந்தித்து, உக்ரைனின் அவசர வான் பாதுகாப்புத் தேவைகள் மற்றும் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் குறித்து விவாதித்தார். உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் சீனாவின் பங்கு முக்கியமானது என்றும் அவர் அப்போது குறிப்பிட்டிருந்தார். “இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பாதை, வாஷிங்டன், கீவ் அல்லது மாஸ்கோவை விட பெய்ஜிங் வழியாகவே செல்கிறது,” என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“ஸ்டாலினுக்கு கோபம் வந்தால் இந்த ஆட்சி நீடிக்காது.!" – அதிமுக ராஜேந்திர பாலாஜி சொல்வது என்ன?

சிவகாசி சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது....

"'நீ இங்க வரவேணாம்; வேற கட்சிக்குப் போ'னு சொல்லிருக்கணும்; ஆனா…" – திமுகவை விமர்சிக்கிறாரா திருமா?

தர்மபுரியில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட விசிக தலைவர் தொல். திருமாவளவன்...

தமிழகப் பசு வதைத் தடை விவகாரம் – சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

தமிழகத்தில் பெரும் அரசியல் மற்றும் சமூக விவாதங்களை ஏற்படுத்தியிருந்த பசு வதைத்...