திருப்பதி உலக பிரசித்தி பெற்றது. இந்தக் கோவிலுக்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து பெருமாளைத் தரிசனம் செய்து செல்வார்கள். லட்டும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் லட்டில் சேர்க்கப்படும் நெய்யில் விலங்குகளின் கொழுப்பைக் கலந்ததாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டுக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மறுப்பு தெரிவித்து வந்தது.
திருப்பதியில் கொடுக்கபடும் லட்டினை ஆய்வுக்குட்படுத்தியதில் மாட்டுக்கொழுப்பு உள்ளிட்ட விலங்குகளின் கொழுப்புகள் சேர்க்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து நெய் சப்ளை செய்த நிறுவனங்கள் நெய் டின்கள் குஜராத்தில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு சோதிக்கப்பட்டது.
திருப்பதிக்கு நெய் சப்ளை செய்த திண்டுக்கல் மாவட்டம் பிள்ளையார் நத்தம் பிரிவில் உள்ள ஏ.ஆர். டெய்ரி புட் நிறுவனத்தின் நெய்யில் 20 சதவீதம் மட்டுமே தரம் இருப்பதாகவும், அதில் சோயா பீன்சில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெய், மீன் எண்ணெய், மாட்டிறைச்சி கொழுப்பு உள்ளிட்ட பொருட்கள் கலப்படம் செய்யப்பட்டிருக்கின்றன என்பன ஆய்வில் தெரிய வந்ததாக கூறப்பட்டது.
இதையடுத்து அந்த நிறுவனத்தை கருப்பு பட்டியலில் திருப்பதி கோயில் தேவஸ்தானம் சேர்த்துவிட்டு, வேறு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து நெய் கொள்முதல் செய்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது இந்த நிறுவனத்தின் உரிமையாளர் ராஜசேகரின் வீடு, நிறுவனம் என இரண்டு இடங்களில் நேற்று காலை 8 மணி முதல் இரவு வரை அமலாக்கத் துறையினர் 12க்கும் மேற்பட்டோர் நான்கு கார்களில் வந்து சோதனை மேற்கொண்டனர்.

அதோடு தில்லி, மும்பை, அகில்யாநகர், பிகானர், டேராடூன், குண்டூர் மற்றும் ரூர்க்கி ஆகிய நகரங்களில் இந்த நிறுவனத்திற்குச் சொந்தமான 15 இடங்களில் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டன.
இந்தச் சோதனையில்போது, கணக்கில் வராத பணம் மற்றும் நெய் கலப்பட ஊழல் மூலம் ஈட்டப்பட்டப் பணத்தில் வாங்கிய சொத்துகளை அமலாக்கத்துறை கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.




