21
June, 2026

A News 365Times Venture

21
Sunday
June, 2026

A News 365Times Venture

'ட்ரம்பின் ஒப்பந்தம் எங்களைக் கட்டுப்படுத்தாது' – ஈரான் அமைதி ஒப்பந்தத்தில் முரண்படும் இஸ்ரேல்

Date:

வருகிற 19-ம் தேதி ஈரான் அமைதி ஒப்பந்தம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இந்த நேரத்தில் ஈரான் போரின் முக்கிய தரப்புகளில் ஒன்றான இஸ்ரேல் தனது கருத்தை தெரிவித்துள்ளது.

ஈரான் அமைதி ஒப்பந்தம் குறித்து இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு அமைச்சர் பென்-க்விர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது…

“ட்ரம்பின் ஒப்பந்தம் எங்களைக் கட்டுப்படுத்தாது. இஸ்ரேல் ஒன்றும் அமெரிக்காவிற்கு அடிபணிந்த நாடு அல்ல. நாங்கள் ஒரு சுதந்திரமான, இறையாண்மை கொண்ட நாடு!

பென்-க்விர்

எங்களின் கடமை இஸ்ரேல் குடிமக்களுக்கும், ஐடிஎஃப் ராணுவ வீரர்களுக்கும், யூத மக்களுக்கும் மட்டுமே உரியது.

ஆயிரக்கணக்கான ஆண்டுக்கால நாடு கடத்தப்பட்ட வரலாற்றில், ஒடுக்கப்பட்ட மற்றும் படுகொலை செய்யப்பட்ட யூதர்களுக்கு இஸ்ரேல் மண்ணில் பாதுகாப்பை வழங்குவதே எங்களின் வரலாற்று ரீதியான கடமையாகும்.

ஒவ்வொரு முறையும் இஸ்ரேலின் பாதுகாப்பைப் பலிகொடுத்து, சர்வதேச அழுத்தங்களுக்கு நாம் பணிந்தபோதெல்லாம், அதற்கான விலையை வட்டியும் முதலுமாக நம் மக்களின் ரத்தத்தால் கொடுத்துள்ளோம்.

இது ஓஸ்லோ ஒப்பந்தத்திலும் (Oslo Accords) நடந்தது. 2006 லெபனான் ஒப்பந்தத்திலும் நடந்தது. அதேபோல் காசாவை நாம் சகித்துக்கொண்ட ஒவ்வொரு காலகட்டத்திலும் அது நம் முகத்திலேயே வெடித்தது.

நாங்கள் தெளிவாகக் குறிப்பிடுகிறோம்: நாங்கள் அமெரிக்காவை நேசிக்கிறோம். அதிபர் ட்ரம்பிற்கு எங்களின் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஆனாலும், இஸ்ரேல் நாடு ஒன்றும் ‘பனானா ரிபப்ளிக்’ அல்ல.

இதைத்தான் நான் பிரதமரிடம் எப்போதும் கூறி வருகிறேன். முக்கிய வரலாற்றுச் சந்திப்புகள் நடக்கும் மூடிய அறை கூட்டங்களிலும் இதைத்தான் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்: வரலாற்றுச் சிறப்புமிக்க தருணங்களில், வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகளையே எடுக்க வேண்டும்.

இஸ்ரேல் - ஈரான்
இஸ்ரேல் – ஈரான்

என்னுடைய நிலைப்பாடு மிகவும் தெளிவானது: எங்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்காத இந்த ஒப்பந்தத்தில் நாங்கள் பங்காளியாக இருக்க முடியாது.

இது எங்களை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது. ஹிஸ்புல்லாவை முழுமையாக அழித்தொழிப்பதை விடக் குறைவான எதற்கும் நாம் உடன்படக் கூடாது.

நம் வீரர்கள் கைப்பற்றி, பயங்கரவாதக் கட்டமைப்புகளை அழித்துச் சுத்தப்படுத்திய எந்தவொரு பகுதியிலிருந்தும் நாம் பின்வாங்கக் கூடாது.

ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகள் வடக்குப் பகுதி குடியிருப்புகளின் வேலிக்கு அருகில் வந்து அமரும் நிலைக்கு நாம் மீண்டும் திரும்பக் கூடாது. மேலும், இஸ்ரேலை நோக்கி நடத்தப்படும் தாக்குதல்களுக்கு முன்னால் நாம் ஒருபோதும் அமைதியாக இருக்கக் கூடாது.

நாம் ஒன்றை மிகத் தெளிவாக உணர்த்த வேண்டும்: லெபனானில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவப்படும் ஒவ்வொரு ட்ரோன், யுஏவி (UAV) அல்லது ஏவுகணைக்கும், தஹியாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலே பதிலாக இருக்கும்.

சில மாதங்களுக்கு முன்பு வரை இதுதான் நமக்கான தற்காப்புப் பலமாக இருந்தது. அதை நாம் எந்தச் சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்கக் கூடாது.

இஸ்ரேல் - ஈரான்
இஸ்ரேல் – ஈரான்

அனைத்திற்கும் மேலாக, நாம் இதை அனைவருக்கும் தெளிவாகச் சொல்ல வேண்டும்: இஸ்ரேல் மக்கள் என்பவர்கள் 3,000 ஆண்டுகாலப் பாரம்பர்யம் கொண்டவர்கள், நீண்ட பயணத்தைக் கண்டு அஞ்சாத என்றும் அழியாத மக்கள்.

பிரபஞ்சத்தைப் படைத்தவன் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. நாங்கள் எங்கள் தாய்நாட்டிற்கு வலிமையோடும் பெருமையோடும் திரும்பிய ஒரு பலமிக்க இனம்.

இனி எந்தவொரு எதிரிக்கு முன்னாலும் நாங்கள் தலைகுனியப் போவதில்லை. யூதர்கள் அடிகளையும் உதைகளையும் வாங்கிக்கொண்டு அமைதியாக இருந்த காலம் முடிந்துவிட்டது. இனி ஒருபோதும் அது நடக்காது!”

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ட்ரம்ப் VS மெலோனி: மோதிக்கொள்ளும் தலைவர்கள்; சிக்கலில் மெலோனியின் சர்வதேச அதிகாரம்!

நெருங்கமான நட்பு!ஒரு காலத்தில் சர்வதேச அரங்கில் மிகவும் நெருங்கிய அரசியல் கூட்டாளிகளாகக்...

சர்வதேச யோக தினம்: '50 வயதில் இருந்ததை விட 70 வயதில்.!' – மோடி பேசிய 6 முக்கிய புள்ளிகள்!

இன்று 12-வது சர்வதேச யோக தினம். இந்த ஆண்டு இந்திய பிரதமர்...

தள்ளி நிற்கும் ஸ்டாலின்… நெருக்கம் காட்டும் ராகுல் – காங்கிரஸ் போடும் கணக்கு என்ன?

"அன்புச் சகோதரர்" மிஸ்ஸிங்மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு...

மாதப்படி வழக்கு: `மீண்டும் ஆஜராகுங்கள்'-பினராயி விஜயன் மகளுக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை!

கேரள மாநிலம், கொச்சியைச் சேர்ந்த சி.எம்.ஆர்.எல் தனியார் நிறுவனம் மற்றும் சி.பி.எம்...