தலைநகர் தி.மு.க-வில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்ய அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் முடிவெடுத்திருந்தாலும், இன்னமும் சீனியர்கள் ஆதிக்கம் அதீதமாக இருப்பதாக குமுறத் தொடங்கியிருக்கிறார்கள் உதயநிதி ஆதரவாளர்கள்.
சரி, தலைநகர் தி.மு.க-வின் என்னதான் நடக்கிறதென விசாரித்தோம்!
‘தலைநகர் சென்னை, தி.மு.க-வின் கோட்டை’ என்ற நிலையைப் புரட்டிப் போட்டிருக்கின்றன நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள். மொத்தமுள்ள மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளின்கீழ் வரும் பதினாறு சட்டமன்றத் தொகுதிகளில் இரண்டே இரண்டு தொகுதிகளில் மட்டுமே வென்று மீதித் தொகுதிகளில் மண்ணைக் கவ்வியிருக்கிறது தி.மு.க.
அதிலும் கட்சியின் தலைவர் ஸ்டாலினே கொளத்தூரில் வெற்றி வாய்ப்பை த.வெ.க-விடம் பறிகொடுத்ததை மாற்றுக் கட்சியினரே ஏற்றுக்கொள்ள முடியாமல் வருந்துகின்றனர்.
தலைநகர் சென்னையில் தி.மு.க-வின் பரிதாபகரத் தோல்வியால் ரொம்பவே மனமுடைந்துபோன ஸ்டாலின், தோல்விக்கான காரணத்தை த.வெ.க-மீதும், இளம் வாக்காளர்களும் மீதும் போட்டுவிட்டு மா.செ-க்கள் தப்பிக்கப் பார்ப்பதாக ஆவேசப்பட்டார்.
ஆனாலும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் சீனியர்கள் சேகர் பாபு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் மூக்கை நுழைத்திருப்பதால் உதயநிதி ஆதரவாளர்கள் கடும் அப்செட்டில் இருக்கிறார்களாம்.
நம்மிடம் பேசிய தலைநகர் தி.மு.க-வினர் சிலர் “சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு ‘உடன்பிறப்பே வா’ நிகழ்ச்சியின்மூலம் தொண்டர்களின் கருத்துகளை கேட்ட தி.மு.க தலைவர் சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு கள ஆய்வுக் குழுவை அனுப்பி கருத்துகளை கேட்டறிந்தார். அந்த குழு சென்னையில் ஆய்வு மேற்கொண்டபோது முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகிய இருவர்மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். கொளத்தூரில் தலைவரை வெற்றிபெற வைக்க தவறிய சேகர் பாபுமீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதங்களை எழுதினார்கள்.
அதன்விளைவாக கொளத்தூர் தொகுதி அவரிடமிருந்து பறிக்கப்படவிருக்கிறது.
தொண்டர்களிடமிருந்து புகார்கள் வந்ததோடு கட்சித் தலைவரை வெற்றிப்பெற தவறிய நிலையிலும் அவருக்கு 3 தொகுதிகளை கவனிக்கும் பொறுப்பை வழங்கவுள்ளது. உடன்பிறப்பே வா, கள ஆய்வுக்குழு, மறுசீரமைப்பு குழுக்களிடம் நாங்கள் சொன்ன கருத்துகளை தலைமை காற்றில் பறக்கவிட்டிருப்பது பெரும் வேதனையை தருகிறது” என்றனர்.
தொடர்ந்து பேசியவர்கள், “சென்னையில் பிரிக்கப்படவுள்ள மாவட்டங்களில் 10 மா.செ-க்களி்ல் இருவருக்கும் மட்டும்தான் மூன்று தொகுதிகளை நிர்வகிக்கவுள்ளனர். மற்றவர்களுக்கு இரண்டு தொகுதிகள் மட்டுமே. அந்த இருவரில் சேகர்பாபுவுக்கும் இடம் கிடைத்திருக்கிறது தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கொளத்தூரில் தலைவர் தோற்ற நிலையிலும் அவருக்கு மா.செ பட்டியலில் சிறப்பிடத்தை வழங்குவதா.. எனக் குமுறுகிறார்கள்.

அதேநேரம், சேப்பாக்கத்தில் உதயநிதி வென்றார். அதன் பொறுப்பு மாவட்டச் செயலாளரான சிற்றரசு ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம் தொகுதிகளுடன் மூன்றாவதாக போட்டியிட்ட அண்ணா நகர் ஒதுக்கப்படும் எனச் சொல்லப்பட்டது. ஆனால், சிற்றரசுக்கு 3 தொகுதிகளை ஒதுக்காமல் சேகர் பாபுக்கு ஒதுக்கப்படலாம் என்ற தகவல் கட்சிக்குள் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தீவிர ஆதரவாளரான சிற்றரசுவை மூன்று தொகுதி மா.செ-வாக ஆக்கவிடாததன் பின்னணியில் சேகர் பாபுவின் கைங்கர்யம் இருப்பதாகவும் சொல்கிறார்கள். அதேபோல் பரந்தாமன், ஆர்.கே நகர் எமினேசர், கே.பி சங்கர் ஆகியோரை மாவட்டப் பொறுப்புக்கு வரவிடாமலும் பாபு காய் நகர்த்துகிறார்” என்றனர்
தென் சென்னையிலும் உடன்பிறப்புகளின் குமுறல் சத்தம் அதிகமாகவே இருக்கின்றன. நம்மிடம் பேசிய அப்பகுதியின் பகுதி கழகச் செயலாளர்கள் சிலர், “சென்னை தெற்கு மாவட்டச் செயலாளரான முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், மதுரவாயல், வேளச்சேரி ஆகிய ஐந்து தொகுதிகளை நிர்வகித்து வந்தார். 5 தொகுதிகளிலும் பெருவாரியாக வாக்குகள் வித்தியாசத்தில் த.வெ.க வெற்றிபெற்றுள்ளது.
மா.சு போட்டியிட்ட சைதாப்பேட்டை தொகுதியிலேயே 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது த.வெ.க. ஆனாலும்கூட மா.சுப்பிரமணியனுக்கு 3 தொகுதிகளை நிர்வகிக்கும் பொறுப்பு தரப்பட்டிருக்கிறது. கட்சிக்காரர்களுக்கு எதுவுமே செய்யவில்லை என அவர்மீது தொடர்ச்சியாக புகார் கூறியும் இவர்களுக்கு முன்னுரிமை வழங்கியிருப்பது வருத்தமளிக்கிறது” என்றனர்.

இளைஞரணி நிர்வாகிகளோ, “சீனியர்களை மாவட்டச் செயலாளர்களாக நியமித்தால் பழைய ஆட்களையே மாவட்ட நிர்வாகத்திலும் அமர வைப்பார்கள். அப்படித்தான் நடக்கும் என்றால் எதற்கு அந்த மறுசீரமைப்பு. இளைஞர்களுக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதுதான் கடந்த சட்டமன்றத் தேர்தல் உணர்த்தியிருக்கும் செய்தி. அதனை புரிந்துகொள்ளாமல் சீனியர்களுக்கே அனைத்து முக்கியத்துவத்தை கொடுத்தால் கட்சியை தோல்வியிலிருந்து மீட்க முடியாது. மீண்டும் தலைநகரின் சீனியர்கள் ஆதிக்கம் செலுத்த முனைவது எங்கள் இளைஞரணிச் செயலாளர் உதய் அண்ணாவை கொதிக்க வைத்துவிட்டது” என்றனர்.




