“முன்னாள் முதல்வர் காமராஜர் மறைந்த போது அவரை நல்லடக்கம் செய்ய சென்னை மெரினா கடற்கரையில் திமுக அரசு இடம் தர மறுத்தது” என காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் தாரகை கத்பர்ட் நேற்று குற்றம்சாட்டிருந்தார்.
இந்நிலையில் திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டமன்றத்தில் இதற்கு விளக்கம் அளித்திருக்கிறார்.
இதுதொடர்பாகப் பேசியிருக்கும் அவர், “நேற்றைய தினம் இந்த அவையிலே உரையாற்றிய காங்கிரஸ் கட்சின் சட்டமன்றக் குழுத் தலைவர் தாரகை கத்பர்ட், ‘கலைஞர் முதலமைச்சராக இருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சிக்காலத்தில், பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு சென்னை மெரினா கடற்கரையிலே, அவருடைய திருவுடல் நல்லடக்கம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக’ ஒரு செய்தியை இங்கே பதிவு செய்தார்.
வரலாற்றிலும், இந்தப் பேரவையிலும் பிழையான செய்திகள், உண்மைக்கு மாறான செய்திகள் பதிவாகிவிடக் கூடாது என்கின்ற அடிப்படையில், சில விளக்கங்களை நான் இங்கே அளிப்பது என்னுடைய கடமை என்று நான் கருதுகிறேன்.
காமராஜர் மரணமடைந்த செய்தியைக் கேள்விப்பட்டவுடன், அன்றைக்கு முதலமைச்சராக இருந்த கலைஞர், உடனடியாக காமராஜருடைய இல்லத்திற்கு விரைந்து சென்று, அவருக்கு மரியாதை செய்தார்.
அப்போது அங்கே இருந்த காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், “காமராஜருடைய உடலை தேனாம்பேட்டையில் இருக்கக்கூடிய காங்கிரஸ் மைதானத்திலே அடக்கம் செய்ய வேண்டும்” என்று வாதிட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் முதல்வர் கலைஞர், ‘காமராஜர் பெருந்தலைவர். காமராஜர் ஏதோ காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர் மட்டும் கிடையாது. அவர் ஒரு பெரிய தேசியத் தலைவர். அவரை உரிய முறையிலே நாம் அடக்கம் செய்து, நினைவிடம் கட்ட வேண்டும்’ என்று வலியுறுத்தியதுடன், அவருடைய திருவுடலை உடனடியாக ராஜாஜி மண்டபத்திற்குக் கொண்டுவந்து, முழு அரசு மரியாதையோடு அங்கே பொதுமக்கள் பார்வைக்கு வைக்க நடவடிக்கையும் எடுத்தார்” என்று தாரகை கத்பர்ட்டின் குற்றச்சாட்டிற்கு விளக்கம் அளித்திருக்கிறார்.




