ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கான இந்தியத் தூதராகவும், ஆஸ்திரேலியாவுக்கான உயர் ஆணையராகவும் பணியாற்றியவர், நவதீப் சிங் சூரி. இவர் பஞ்சாபில் நடைபெற்ற இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிரத் திருத்த நடைமுறையின் (SIR) போது, தான் எதிர்கொண்ட அனுபவம் குறித்து தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் தன் எக்ஸ் பக்கத்தில், “பஞ்சாபில் நடைபெற்ற சிறப்பு தீவிரத் திருத்த நடைமுறையின் போது வாக்குச்சாவடி நிலை அலுவலரைச் (BLO) சந்தித்து எனது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டையைச் சமர்ப்பித்தேன். அனைத்து விவரங்களும் சரியாக இருப்பதாக அப்போது தெரிவிக்கப்பட்டது. ஆனால், 2003-ம் ஆண்டின் விவரங்களுடன் சில தகவல்கள் ஒத்துப்போகவில்லை என்று ஒரு அலுவலரிடமிருந்து எனக்கு செய்தி வந்தது.
மேலும், வாக்காளர் அலுவலர் என்னை நேரில் வந்து ஒரு அறிவிப்பைப் பெற்றுக்கொண்டு, இந்தியக் குடியுரிமையை நிரூபிப்பதற்கான சில ஆவணங்களுடன் வருமாறு கேட்டுக் கொண்டார். 2003-ம் ஆண்டில் நான் இந்தியாவில் இருக்கவில்லை என்று பதிலளித்தேன். அதன்பின்னர், சான்றாக எனது பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டனர். வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டையைத் தவிர வேறு சில ஆவணங்கள் என்னிடம் உள்ளன. ஆனால், மூன்று நாடுகளுக்கு இந்தியத் தூதராகப் பணியாற்றிய பிறகும், எனது குடியுரிமையை நிரூபிப்பதில் எனக்குச் சிரமம் ஏற்படுகிறது என்றால், சாதாரணக் குடிமக்களின் நிலை என்ன? இதுதானா வாழ்க்கையை எளிதாக்கும் நடைமுறை?” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.




