அமமுக-வின் தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் தெற்கு ஒன்றியச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தியின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “பரந்தூர் விமான நிலையம் அமைத்தால் நீர் நிலைகள் பாதிக்கும் என்றும் குறிப்பாக செம்பரம்பாக்கம் உள்ளிட்ட நீர் நிலைகளுக்கான நீர் வரத்து பாதிக்கும் என்று அப்பகுதி மக்கள் போராடினர். நாங்கள் கூட அந்த மக்களுக்கு ஆதரவு தெரிவித்தோம். திரு.விஜய் கூட ஆதரவு தெரிவித்தார். நிலம் கையகப்படுத்தியுள்ளதால் அந்த திட்டத்திற்கு மாற்றாக, அந்த மக்கள் ஏற்றுக்கொள்கின்ற மாற்றுத் திட்டத்தை விவசாயம் சார்ந்து கொண்டு வர வேண்டும். திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதை நான் பார்த்தேன்.
பரந்தூர் விமானம் நிலையம் வராததால், விமான நிலையத்தை இன்டர்நேஷனல் தரத்திற்கு ஆட்சியாளர்கள் விரிவுப்படுத்த வேண்டும். பரந்தூர் விமானம் நிலையம் வராமல் தடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. செங்கோட்டையன் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து அதிமுக தொண்டர். எம்.எல்.ஏ, அமைச்சராக இருந்தவர். தன்னை நீக்கிய கோபத்தில் தவெகவுக்கு தாவி அங்கு அமைச்சராக இருக்கிறார். செங்கோட்டையனை அடையாளம் காட்டிய அதிமுகவை யாரோ ஒரு சிலர் மீதுள்ள கோபத்தில் அக்கட்சி அழிந்து விடும் என்கிறார். இப்படி வன்மம் பிடித்த மனிதராக செங்கோட்டையன் இருப்பாரென்று நான் நினைத்ததில்லை.
எடப்பாடி பழனிசாமியோ அல்லது மற்றவர்களோ கட்சியில் இருந்து வெளியேறுவதற்கு காரணமாக இருக்கலாம், அதற்கு அந்த கட்சி மதிமுக அளவிற்கு போய் விடும் என்கிறார். அதை அழிக்கின்ற செயலில் தேர்தல் முடிந்த பிறகு ஈடுபடுகிறார். செங்கோட்டையன் நிலை அங்கு எப்படி இருக்கிறது என்று எனக்கு தெரியும். தன்னை அடையாளப்படுத்திய கட்சி அழிந்து விடும் எனக் கூறுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். தவெக ஆட்சிக்கு வந்ததால் அங்கு இருக்கிறார். வரவில்லை என்றால் என்ன செய்திருப்பார் என்பது பில்லியன் டாலர் கேள்வி.

முதல்வர் விஜய் நாங்கள் தூய சக்தி என்றும் திமுக, அதிமுக எல்லாம் ஊழல் சக்தி, தீய சக்தி என்றும் சினிமா டயலாக் பேசினார். விஜய் என்ன கப்பலோட்டிய தமிழனா, சுதந்திர போராட்ட தியாகியா. விஜயகாந்த் போல் விஜய் இம்ப்பேக்ட் ஏற்படுத்துவார் என தேர்தலுக்கு முன்பே சொன்னேன். யாரையும் விமர்சிக்கும் பழக்கம் எனக்கு இல்லை, நம்மை விமர்சிப்பவர்கள் யாரையும் விட மாட்டேன். ஆட்சி அமைப்பதற்காக சராசரி அரசியல்வாதிகளை விட இறங்கி ஒரு எம்.எல்.ஏ என்பதால் அமமுக எம்.எல்.ஏவிடம் பேரம் பேசி காரில் கையெழுத்து வாங்கினர். இது தொடர்பாக ஆளுநரிடம் அளித்த புகார், காவல் நிலையத்தில் எஸ்.காமராஜ் அளித்த புகார் எல்லாம் எக்ஸ்பைரி ஆகவில்லை.
மூணு பைல் ஆதாரத்துடன் எங்ககிட்ட இருக்கு, ஆக்ஷன் எடுக்க வச்சிராதீங்கனு மிரட்டும் தொனியில் விஜய் சொல்கிறார். ஊழல் நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை. இதுவரை எந்த முதலமைச்சரும் சட்டமன்றத்தில் இப்படி பேசி மிரட்டியதில்லை. இதற்கு திராவிட கட்சிகள் பயப்படுமா என்பது வேறு. விஜய் பேசுவது அப்பட்டமான மிரட்டல். சினிமாவில் அவரை ஹீரோவாக பார்த்தவர்கள் டி.வியில் ரகுவரன் ஸ்டைலில் வில்லனாக பார்க்கின்றனர். அவருடைய ஒரிஜினல் கேரக்டர் அதுதான் என நினைக்கிறேன். வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விவசாயிகள் வயிற்றில் அடித்தார். மூணு சிலிண்டர் தருவதாக சொல்லியுள்ளனர். இன்ஸ்டா ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்தவர்கள் இன்ஸ்டால்மென்ட்டில் தருகிறார்கள் என நினைத்தேன். அதன் பிறகு தான் இரண்டரை லட்சம் வருமானத்திற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் என ஆப்பு வைத்துள்ளனர்.

எனக்கு தெரிந்து விஜய் வில்லனாக மாறி விட்டார். சினிமாவில் நடித்த அவர் கலைமாமணி, பத்ம பூஷன் உள்ளிட்ட எந்த விருதையும் பெறவில்லை. அரசியல்வாதியாக சிறந்த வில்லன் நடிகராக, பாரத ரத்னா கொடுக்கும் அளவுக்கு விஜய் நடந்து கொள்கிறார். நேர்மையாகவும், ஹம்பலாகவும் காட்டிக்கொண்டு மிரட்டும் தொனியில் பேசுவது அழகல்ல.
சட்டசபையில் கருணாநிதி, ஜெயலலிதா முதலைச்சராக இருந்த போது எத்தனையோ சண்டைகள் பார்த்திருக்கிறோம். இப்போது தலை, கால் புரியாமல் பேசுகின்றனர். ஆனந்தை தவிர வேறு யாரும் தவெகவினர் கிடையாது. ஆதவ் அர்ஜூனா, சபரீசன் பின்னாடி பெட்டி தூக்கிட்டு போனவர். அவருக்கு பெரிய கொள்கை கோட்பாடு கிடையாது. நிர்மல்குமார் பல கட்சி பலராமன். எடப்பாடி தலைமையில் இருந்துட்டு கொஞ்சம்கூட மரியாதை இல்லாமல் பேசுகிறார். உதயநிதியை ஆதவ் அர்ஜூனா பேசும் போது சிரிப்பு தான் வருகிறது. வில்லன் கூட்டமாக இருக்கின்றனர். தவெக-வுக்கு வாக்களித்த 35 சதவீத மக்கள் உணர தொடங்கியிருப்பார்கள்” என்றார்.




