அரியலூர் மாவட்டம், அரசு மகப்பேறு மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட தாய்சேய் நல மையம் செயல்பட்டு வருகிறது. இதில் மகப்பேறு உயர் கண்காணிப்புப் பிரிவு, மகப்பேறு தீவிர சிகிச்சைப் பிரிவு, வளர் இளம் பிள்ளை கவனிப்புப் பகுதி, குழந்தைகள் புற நோயாளிகள் பகுதி உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு தினமும் நூற்றுகணக்கான கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில் சுகாதாரமான குடிநீர் கிடைக்காமல் தவித்து வந்தனர்.
மருத்துவமனைக்கு வருபவர்கள் குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் வெளியில் சென்று பணம் கொடுத்து தண்ணீர் வாங்கி குடிக்கும் நிலை இருந்தது. இதே போல் சிகிச்சையில் இருப்பவர்கள் சுடு தண்ணீர் கிடைக்காமல் ஹோட்டல்களில் போய் வாங்கும் நிலை இருந்தது.
கேஸ் தட்டுப்பாடு, கமர்ஷியல் கேஸ் விலை உயர்வு உள்ளிட்டவையால் சுடு தண்ணீர் கேட்டு செல்பவர்களுக்கு தண்ணீர் தராமல் ஹோட்டல்களில் திருப்பி அனுப்புவார்கள். இந்நிலையில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி மேம்படுத்தப்பட்ட தாய்சேய் நல மைய வளாகத்தில் ஆய்வு செய்தார்.
அப்போது கர்ப்பிணிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் குடிப்பதற்குச் சுத்தமான தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுவதாக மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர். வெளியில் போய் தண்ணீர் வாங்கி குடிக்கும் நிலை உள்ளது. பல சமயம் வெளியே செல்ல முடியாமல் தாகத்துடன் இருக்கிறோம். தவிச்ச வாய்க்கு தண்ணீர் கொடுத்து தாகத்தைத் தீர்ப்பதற்கு ஏற்பாடு செய்து கொடுங்கள் என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.
உடனே இதற்கான ஏற்பாட்டைச் செய்வதற்கு உத்தரவிட்டார் மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி. அடுத்த சில தினங்களில் அரியலூர் இந்தியன் வங்கி சார்பில் சமூக பொறுப்பு செயல்பாட்டுத்துறை நிதியிலிருந்து ரூ.2.37 லட்சம் மதிப்பில் இரண்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் அமைக்கப்பட்டது.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி புதிதாக அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்த பிறகு கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்டோர் பயன்பாட்டிற்காகத் தொடங்கி வைத்தார். அப்போது, இனி இங்கேயே உங்களுக்குச் சுத்தமான குடிநீர் கிடைக்கும் என்றார் மாவட்ட ஆட்சியர்.
இதில் நெகிழ்ச்சியடைந்த பெண்கள், இனி எங்களுக்கு குடிநீர்ப் பிர்ச்னை இருக்காது. இனி சுடு தண்ணீருக்காக நாங்கள் அலைய வேண்டியதில்லை. எங்களின் நிலையை அறிந்து உடனடியாக இதைச் செய்து தந்து தாகம் தீர்த்த மாவட்ட ஆட்சியருக்கு நன்றி என்றனர்.
பின்னர், மாவட்ட ஆட்சியர் தாய்சேய் நல மைய வளாகத்தில் சாலை விரிவாக்கத்திற்காக அகற்றப்பட்ட நுழைவு பாதை மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நடந்து வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி ஆய்வு செய்தார். அப்போது, கட்டுமானப் பொருட்களின் தரம் உள்ளிட்டவை குறித்து கேட்துடன் பணிகளைத் தரமாகவும், விரைவாகவும் முடித்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.




