“தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் ஆதரவு யாருக்கு என்பதை நிர்வாகிகளுடன் ஆலோசித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்” என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டம், அரூரில் நடந்த த.மா.கா நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தருமபுரியை வறட்சி மாவட்டமாக அரசு அறிவிக்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்றுள்ள கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.
யு.பி.ஐ பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கும் அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். தமிழகச் சட்டமன்றத்தில் சபாநாயகர் நேர்மையாகவும் நடுநிலையாகவும் செயல்படுகிறார்.
தமிழகத்தில் காவிரிப் படுகையில் 5 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க அமெரிக்க நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளதற்கு அனுமதி அளித்தால், விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படும். எனவே, இத்திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது.
தாராபுரம், மதுராந்தகம் தொகுதிக்கான இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை த.மா.கா தலைவர்கள், நிர்வாகிகளுடன் ஆலோசித்து உரிய நேரத்தில் அறிவிப்போம்” என்றார்.




