புதுச்சேரி சட்டசபையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். நடப்பு நிதியாண்டில் சட்டசபை தேர்தல் குறுக்கிட்டதால் பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான 5 மாத அரசின் செலவினங்களுக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு சட்டசபையின் ஒப்புதல் பெறப்பட்டது.
தேர்தல் முடிந்த நிலையில் முழுமையான பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்ய வேண்டும். இதற்காக மத்திய அரசிடம் ரூ.14,300/- கோடிக்கு ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் முடிவு வெளியாகி வரும் ஆகஸ்ட் 4-ம் தேதியுடன் மூன்று மாதங்கள் முடிவடைய உள்ள நிலையிலும், இன்னும் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கவில்லை. சட்டசபையை நடத்தக்கூடிய சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தலும் நடத்தவில்லை.
தற்போது வரை அரசுத் துறைகள் அனைத்தையும் முதலமைச்சர் ரங்கசாமியே கவனித்து வருகிறார். இலாகா இல்லாததால் அமைச்சர்களும் சட்டசபைக்கு வருவதில்லை. இதனால் தேர்தல் நடத்தை விதி காலத்தில் இருந்தது போலவே சட்டசபை வளாகம் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி கிடக்கிறது.
வரும் ஆகஸ்ட்டு மாதத்துடன் அரசின் செலவினங்களுக்கு பெறப்பட்ட ஒப்புதல் முடிவடைகிறது. இதனால் ஆகஸ்ட் மாதத்தில் சட்டசபையை கூட்டி பட்ஜெட் தாக்கல் செய்து, அரசின் செலவினங்களுக்கு ஒப்புதல் பெற வேண்டிய கட்டாயத்துக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது.
ஆடி மாதம் என்பதால் சட்டசபையை கூட்டாவிட்டாலும், ஆகஸ்ட் 18-ம் தேதி ஆவணி மாதம் தொடங்குகிறது. அன்றைய தினமாவது சபையைக் கூட்டி முழு பட்ஜெட் தாக்கல் செய்து சபையின் ஒப்புதலைப் பெற வேண்டும்.
ஆனால் புதுச்சேரியில் நிதியமைச்சர் யார் என்பதே கேள்விக்குறியாக உள்ளது. புதுச்சேரியைப் பொறுத்தவரை வழக்கமாக முதலமைச்சர்கள்தான் நிதித்துறை பொறுப்பையும் வைத்திருப்பார்கள்.
அதனடிப்படையில் நீண்டகாலமாக பட்ஜெட் தாக்கல் செய்த முதலமைச்சர் என்ற பெயருக்கு சொந்தக்காரராக வலம் வருகிறார் முதல்வர் ரங்கசாமி. பட்ஜெட் முன்தயாரிப்பு பணிகள் துறை வாரியாக நடத்தப்பட வேண்டும். இதை அந்தந்த துறை அமைச்சர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார்கள்.
அதேபோல நடைமுறையில் உள்ள திட்டங்களுக்கு தேவையான நிதி, புதிய திட்டங்கள் குறித்தும் ஆலோசிப்பார்கள். அதைத்தொடர்ந்து முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூடி ஆலோசித்து முடிவுகள் எடுக்கும். ஆனால் தற்போது வரை இதில் எதுவும் நடைபெறவில்லை.

சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்தால் மானியக்கோரிக்கை விவாதம் நடத்தப்படும். விவாதத்துக்கு துறை அமைச்சர்கள் பதில் தர வேண்டும். சட்டசபையில் கேள்வி பதில்களும் வரும். இதற்கெல்லாம் முன்பு சட்டசபை கூடுவதை எம்.எ.ல்.ஏ-க்களிடம் தெரிவித்து அவர்களிடம் கேள்விகளைப் பெற வேண்டும்.
கேள்விகளுக்கான பதில்களை அதிகாரிகள் தயாரித்து, அமைச்சர்களோடு விவாதிக்க வேண்டும். ஏற்கெனவே அமைச்சர்களாக இருந்தவர்கள் இந்த நடைமுறையை எதிர்கொள்வார்கள்.
தற்போதைய சட்டசபையில் இரண்டு அமைச்சர்கள் புதியவர்கள். அவர்கள் எம்.எல்.ஏ-க்களின் கேள்விகளை எதிர்கொள்வதற்குத் தயாராக வேண்டும். இப்படியான சூழலில் அமைச்சர்களுக்கு இலாகா அறிவிக்காமல் அரசு மெத்தனமாக இருப்பது, மக்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது.




