தமிழகச் சட்டப்பேரவையின் செயலாளராகப் பதவி வகித்துவந்த கே.சீனிவாசன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது, தலைமைச் செயலக வட்டாரத்தில் ஒருவித பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.
தவெக அரசு பதவியேற்ற பின் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு விழாவின்போது சபாநாயகரின் இருக்கை அருகே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த அந்த அதிகாரியை எல்லோரும் கவனித்திருப்பீர்கள். அவர், தமிழகச் சட்டப்பேரவைக்கு அதிகார மட்டத்தில் தலைமை அதிகாரியான, சட்டப்பேரவையின் செயலாளரான கே.சீனிவாசன்.
சட்டப்பேரவையின் தலைவராக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆளுங்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர், அதாவது சபாநாயகர் பதவி இருக்கும் சூழலில் செயலாளராக இந்த அரசு அதிகாரிதான் இருப்பார்.
எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராக இருந்த காலத்திலேயே சட்டப்பேரவைச் செயலாளராக இருந்தவர் இந்த சீனிவாசன். 2021ல் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகும் இவர் தனது பதவியில் தொடர்ந்தார். 2023 ல் இவரது பதவிக்காலம் முடிவடைந்தது. ஆனாலும் திமுக அரசு ஓய்வுக்குப் பிறகும் இவருக்குப் பதவி நீட்டிப்பு தந்தது.
அந்தப் பதவி நீட்டிப்பின் படி இந்தாண்டு நவம்பர் வரை இவருக்கு சர்வீஸ் இருக்கும் நிலையில், தற்போது பதவியை ராஜினாமா செய்து சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளார்.
சீனிவாசனின் திடீர் ராஜினாமா குறித்து அரசியல் ஏரியாவில் பல்வேறு தகவல்கள் கசிந்து கொண்டிருக்க, அவர் குறித்தும் அவரது பணி அனுபவம் குறித்தும் சட்டப்பேரவை ஏரியாவில் விசாரித்தோம்.
”சட்டப்பேரவை நடவடிக்கைகளை குறிப்பெடுக்கும் நிருபராகச் சட்டமன்ற பணியைத் தொடங்கியவர். பிறகு தலைமை நிருபர், செக்ஷன் அதிகாரின்னு படிப்படியா உயர்ந்து பேரவைச் செயலாளர்ங்கிற தலைமைப் பதவிக்கு வந்தார். அதனால பேரவையில் நீண்ட பணி அனுபவம் இருக்கு. அதிமுக, திமுக என இரண்டு ஆட்சிக் காலங்களிலும் முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பதவியில இருந்திருக்கார்ங்கிறதை வெச்சே அவர் கான்ட்ரவர்சியில சிக்காதவர்ங்கிறதை நீங்க புரிஞ்சுக்கலாம்.

இன்னும் தெளிவாச் சொல்லணும்னா எந்த ஆட்சி வந்தாலும் ஆட்சியாளர்களின் குட்புக்கில் இடம் பிடிச்சிடுவார். அந்தளவு தன்னுடைய பணியை மட்டும் நேர்மையாச் செய்துட்டுப் போயிட்டே இருப்பார். இத்தனைக்கும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் அதிமுக உறுப்பினர்கள் சிலரே ஆட்சி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொன்டு வந்த நேரத்தில் எல்லாம் இவர்தான் பேரவையின் செயலாளரா இருந்தார்” என்கிறார்கள் இவரை நன்கு அறிந்த சக அதிகாரிகள்.
கடந்த ஆட்சிக் காலத்தில் சட்டப்பேரவையின் பல்வேறு குழுக்களில் உறுப்பினராக பதவி வகித்த விசிக-வைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான எஸ்.எஸ்.பாலாஜியிடம் பேசினோம்.
”சட்டப்பேரவையைப் பொறுத்தவரை நிறைய குழுக்கள் உண்டு. ஆனாலும் மதிப்பீட்டுக் குழு, பொதுக் கணக்குக் குழு, பொது நிறுவனங்கள் குழு ஆகிய மூணு குழுக்கள் ரொம்ப முக்கியமானவை. ஏன்னா இந்தக் குழுக்களுக்கான உறுப்பினர்களுக்குதான் தேர்தல் நடக்கும். இந்த குழுக்களை மினி கேபினட்னு கூட சொவ்வாங்க. மாநிலத்தின் நிதியை நிர்வாகம் செய்கிற பொறுப்பு இந்தக் குழுக்களுக்கு உண்டு. பேரவையின் செயலாளரா மொத்த சட்டசபைக்கும் தலைமைப் பதவியில இருந்தாலும் இந்தக் குழுக்களின் செயல்பாடுகள்லயும் அவரது பங்களிப்பு நிறைய.

பொதுவா அவரது பணியின் தன்மை ஒரு அரசு அதிகாரிங்கிற அளவுதான். ஆனா இந்தக் குழுக்களில் மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏ.க்கள் உறுப்பினரா இருப்பாங்க. அவங்கள்ல சட்டப்பேரவை நடைமுறைகள், விதிகள் தெரியாதவங்களும் இருப்பாங்க. அவங்களுக்கெல்லாம் அவற்றையெல்லாம் எளிதா புரியும்படி விளக்குவார். அதிகாரிகளுக்கு சில புரோட்டோகால்கள் இருக்கும். ஆனா மக்கள் பிரதிநிதிகள் தரப்புல இருந்து நீங்க பேசலாம்னு சில ஆக்கபூர்வமான விஷயங்கள் குறித்து எங்களை பேசச் சொல்வார்.
தனிப்பட்ட முறையில் சொல்லணும்னா பழகுவதற்கு இனியவர். இப்ப ராஜினாமா செய்த காரணம் எனக்குத் தெரியல” என்றார் அவர்.




