தமிழக காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் பொறுப்பேற்ற நிலையில் புதிதாக பல நிர்வாகிகளை நியமித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர்களை அவர் நியமித்தார். அதன்படி கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தலைவராக லாரன்ஸ், மேற்கு மாவட்ட தலைவராக ஜார்ஜ் ராபின்சன், நாகர்கோவில் மாநகர் மாவட்ட தலைவராக சிவபிரபு ஆகியோர் நியமிக்கப்பட்டனர். குமரி மேற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவராக அறிவிக்கப்பட்ட ஜார்ஜ் ராபின்சன் பதவியேற்கும் விழா மார்த்தாண்டம் வெட்டுமணி சந்திப்பில் நடைபெற்றது. இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார், எம்.பி விஜய் வசந்த் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் பேசுகையில், “த.வெ.க அமைச்சர்கள் பேசும்போது எங்கள் முதல்வர் அடுத்த பிரதமர் என்றெல்லாம் சொல்கிறார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் பத்திரிகை நண்பர்களாக இருக்கட்டும் ஊடக நண்பர்களாக இருக்கட்டும் அவர்கள் என்னிடம் ஒரு அமைச்சர் என்ற முறையில் கேட்கும் போது நான் மிக தெளிவாக சொல்லி விடுவேன். வருகிற 2029-ஆம் ஆண்டு நடைபெறுகிற பாராளுமன்ற தேர்தலில் எங்களுடைய தலைவர் ராகுல் காந்தி அடுத்த பிரதமராக வருவார்கள். ஒருவேளை தமிழக வெற்றிக் கழகம் அதற்கு உடன்படாவிட்டால், காங்கிரஸ் கட்சியினுடைய இரண்டு அமைச்சர்களும் இந்த பதவியில் நீடிக்க மாட்டார்கள்.
இது எல்லா இடங்களிலும் நாங்கள் சொல்லக்கூடிய கருத்து. ஏனென்றால், இந்தக் கட்சிதான் எங்களுக்கு பெரிது. இந்த கட்சி இல்லாவிட்டால், இந்த ராஜேஷ்குமார் ஒன்றுமே கிடையாது. இந்த இயக்கம் தான் பெரிது. இந்த இயக்கம் என்ன நினைக்கிறதோ, நாளைக்கு இந்த பதவியை விட்டு செல்ல வேண்டும் என்று கூறினால், அடுத்த நிமிடமே பதவியை விட்டு சென்று விடுவோம்.

ஆகவே, பல்வேறு கருத்துக்கள் இப்போது இருக்கலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்துக்கள் இருக்கலாம். ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கருத்துக்கள் இருக்கலாம், ஒவ்வொரு கொள்கைகள் இருக்கலாம். நம்முடைய காங்கிரஸ் கட்சியில் இருக்கக்கூடிய கடைநிலை தொண்டர்களின் முகம் ராகுல் காந்தி. என்னுடைய முகம் ராகுல் காந்தி. இந்திய மக்களுடைய முகம் ராகுல் காந்தி. அந்த முகமான ராகுல் காந்தி பிரதமராக வரவேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கட்சியினுடைய கடைநிலை தொண்டர்களுடைய விருப்பம். அதை நிறைவேற்றியே தீருவோம் என்பதுதான் இந்த சபதம்” என்றார்.




