தமிழ்நாடு எப்.எல்.2 உரிமத்தாரர்கள் சங்கத் தலைவர் வீரபாண்டியன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில்,”எங்களுடைய சங்க உறுப்பினர்கள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையிடமிருந்து சட்டப்பூர்வ உரிமம் பெற்று மனமகிழ், விளையாட்டு மன்றங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த மனமகிழ் மன்றங்களில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு டாஸ்மாக்கிடம் மதுபானம் கொள்முதல் செய்து விற்பதை செய்து வருகிறோம்.
தற்போது ஆளும் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அத்துமீறி மனமகிழ் மன்றத்திற்குள் நுழைந்து ஆய்வு செய்வது போல வீடியோ எடுக்கின்றனர்.
இது தனிநபர்களின் தனியுரிமையை மீறும் செயல் என்பதோடு உரிமம் பெற்றவர்களை மிரட்டி பணமும் கேட்கின்றனர். பணம் தர மறுத்தால் வேறு வகையில் தாக்குதல் நடத்துகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் கூமாப்பட்டி மற்றும் திருச்சி மாவட்டத்திலுள்ள மனமகிழ் மன்றத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆய்வு என்ற பெயரில் அனுமதியின்றி நுழைந்து, அங்கிருப்பவர்களிடம் கேள்வி எழுப்பியதோடு மன்றத்தின் செயல்பாடுகளில் தலையிட்டு வருகின்றனர்.
மன்றங்களின் செயல்பாடுகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆய்வு செய்கிறேன் என்கிற பெயரில் மனமகிழ்மன்றத்தில் நுழைந்து எங்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.
எனவே சம்பந்தமில்லாத நபர்கள் மனமகிழ் மன்றங்கள் விவகாரத்தில் தலையிடாத வகையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கமிஷனருக்கு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதை விசாரித்த நீதிபதி சி.சரவணன் பிறப்பித்த உத்தரவில், “மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அதிகாரிகளைத் தவிர வேறு யாரும் மனமகிழ் மன்றங்களில் ஆய்வு செய்யக்கூடாது. இதைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்” எனக் கூறி வழக்கை ஜூலை 23க்கு ஒத்திவைத்தார்.




