தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை முற்றிலுமாகத் தடுக்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், முதலமைச்சர் விஜய்யால், “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” என்ற புதிய பிரிவு மிக உத்வேகத்துடன் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சிங்கப்பெண் அதிரடிப்படையின் பொறுப்பாளரான ஐ.ஜி பவானீஸ்வரி, இந்த படை ஒரு “Dedicative Force” மட்டுமல்லாமல், “Preventive and Proactive Force” ஆகவும் செயல்படும் என்று விளக்கினார். அதாவது, ஒரு குற்றம் நடந்த பிறகு நடவடிக்கை எடுப்பதை விட, குற்றம் நடைபெறாமல் முன்கூட்டியே தடுப்பதே இந்தப் படையின் முதன்மை நோக்கமாகும். இந்த திட்டத்திற்காக மாநில அரசு ₹357 கோடி நிதி ஒதுக்கியுள்ளதுடன், அதிரடிப்படைக்காகவே பிரத்யேகமாக காவல்துறையில் 2,545 புதிய காவலர் பணியிடங்களை உருவாக்கி, மாநிலம் முழுவதும் 270 சிறப்பு குழுக்களை அமைத்துள்ளது.
முதற்கட்டமாக, பெண்கள் அதிகமாக நடமாடும் மற்றும் பணிபுரியும் பகுதிகளான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு அதிரடிப்படையினர் நேரடியாகச் சென்று பெண்களுடன் கலந்துரையாடுவார்கள். அவர்களிடம் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தி, அவர்களுக்குப் பாதுகாப்பு குறித்த தன்னம்பிக்கையை வளர்ப்பதுடன், ஏற்கெனவே குற்றங்கள் நடைபெற்ற பகுதிகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொள்வார்கள்.
அங்குள்ள பாதுகாப்புச் குறைபாடுகளைக் கண்டறிந்து, அதனை மேம்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பரிந்துரைகளையும் வழங்குவார்கள். மேலும், காவல்துறையினர் உடனடியாகச் செல்ல முடியாத அல்லது கண்காணிப்பதற்குக் கடினமான பகுதிகளில், இரவு நேரக் கண்காணிப்புப் பணிகளுக்காக 47 நவீன ட்ரோன்கள் (Drones) பயன்படுத்தப்பட உள்ளன. இத்துறையில் உள்ள காவலர்களுக்குப் பிரத்யேக பயிற்சிகள் அளிக்கப்படுவதுடன், காவல்துறையினருடன் இணைந்து தொண்டு நிறுவனங்களும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவுள்ளனர்.

தற்காலத்தில் பெண்கள் சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்கள் மூலம் அதிகளவில் பாதிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய ஐ.ஜி பவானீஸ்வரி, எந்தவொரு பெண் இணையவழி (Cyber) தொல்லைகளுக்கு ஆளானாலும், குற்றவாளிகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். உடல் ரீதியான தொல்லைகள் மட்டுமன்றி, பெண்களுக்கு ஏற்படும் மனரீதியான தொல்லைகளுக்கும் காவல்துறை மிகக் கடுமையாகச் செயல்படும் என்று முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி அவர் தெரிவித்தார்.
`சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு நேரடியாக எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யும் அதிகாரம் உள்ளதா?’ எனச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “இது ஒரு குற்றங்களைத் தடுக்கும் (Preventive) படை என்பதால், சட்டரீதியான நடவடிக்கைகள் மற்றும் எஃப்.ஐ.ஆர் பதிவு தொடர்பாக உள்ளூர் காவல்துறையினரும் குழந்தைகள் நலக் குழு உள்ளிட்ட அமைப்புகளும் தொடர்ந்து ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொள்வார்கள்” என்று தெளிவுபடுத்தினார்.
ஏற்கனவே தமிழகத்தில் நடைமுறையில் உள்ள அவசர உதவி எண்களான 100, 112 மற்றும் பிங்க் பேட்ரோல் (Pink Patrol) போன்ற பாதுகாப்பு அமைப்புகள் அனைத்தும், இந்த புதிய அதிரடிப்படையின் வருகையால் இன்னும் சிறப்பாகத் தயார்படுத்தப்பட்டு பலப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
– கலையரசி.மு, சுபிக்ஷா.ஆ
படங்கள்: சுதா.கா




