ஈரோடு மாவட்டம் அவல் பூந்துறை பேரூராட்சியின் துணைத் தலைவரும் மதிமுகவின் மாநில இளைஞரணி துணைத் தலைவருமான லோ.சோமசுந்தரம் தனது கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்திருக்கிறார்.
’பதவி, பொறுப்பு என்பதெல்லாம் கட்சி போடும் பிச்சை’ என துரை வைகோ கூறிய வார்த்தைகள் தன்னை ரொம்பவே காயப்படுத்தி விட்டதாகக் கூறி இந்த முடிவை எடுத்ததாக கூறுகிறார்.
என்ன நடந்தது என அவரையே கேட்டோம்.
‘’மறைந்த ஈரோடு கணேசமூர்த்தியின் நினைவு நாள் கடந்த மாதம் 28ம் தேதி வந்தது. தலைமையகத்துல அதையொட்டி ஒரு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தாங்க. எங்க சொந்த மாவட்டத்துக்காரர்ங்கிறதால ஈரோடு தெற்கு மாவட்டத்துல இருந்து நிர்வாகிகள் நிறையப் பேர் அதுல கலந்து கொண்டோம்.
நிகழ்ச்சி முடிஞ்சதும், தேர்தல், சீட் ஒதுக்கீடு குறித்த பேச்சு வந்தது. துரை வைகோகிட்ட எங்க மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் எங்க தெற்கு மாவட்டச் செயலாளரான கோபாலுக்கு மொடக்குறிச்சி தொகுதியில் விவசாயிகள் மத்தியில செல்வாக்கு இருக்குங்கிறதைச் சொல்லி அவருக்கு சீட் ஒதுக்க கோரிக்கை வச்சோம். வேறு சிலரும் கூட கேட்டாங்க.

கூட்டணியில குறைவான சீட் கிடைக்கிறதால எல்லாருக்கும் சீட் தர முடியாதுங்கிறதும் எங்களுக்கு தெரியும். ஆனாலும் கோரிக்கைதானேனு கேட்டோம்.
தலைமை இடத்துல இருக்கிறவங்க எப்படி நடந்துக்கிடணும்னு ஒரு நாகரிகம் இருக்கில்லையா?
சீட்டுக்கு வாய்ப்பு இல்லை, பிறகு பார்க்கலாம், இப்படி ஏதாவது சொன்னா சமாதானம் ஆகி போகத்தான் போறோம். ஆனா அவர் எடுத்த எடுப்பிலேயே, ’பதவி, பொறுப்பு எல்லாம் கட்சி கொடுத்தா வாங்கிக்கணும். இல்லாட்டி பேசாம கடந்து போகணும். பொறுப்புங்கிறது கட்சியா பார்த்துப் போடுகிற பிச்சை’னு கடினமான வார்த்தைகளைப் பயன்படுத்தினார்.
நாங்க ஒரு முப்பது பேர் அந்த இடத்துல இருந்தோம். அந்த ஒரு நிமிஷம் எங்களுக்கு என்னவோ போல் ஆகிடுச்சு.
ரொம்பவே காயப்பட்டுட்டோம் எல்லாரும். அதுக்கு மேல அந்த இடத்துல எந்தவொரு பேச்சும் பேசாம ஊருக்கு கிளம்பிட்டோம்.
ஊருக்குத் திரும்பினதும் மத்த நிர்வாகிகள் கிட்ட நடந்தைச் சொன்னதும் அவங்களுமே ரொம்பவே நொந்து போனாங்க.
இருந்தாலும் தேர்தல் சமயத்துல எந்தவொரு முடிவையும் எடுக்க வேண்டாம்னு வருத்தத்தை உள்ளுக்குள்ளேயே பூட்டி வச்சுட்டு கட்சி அறிவிச்ச செந்தில் நாதன் வெற்றிக்காக தேர்தல் வேலை செய்தோம். இத்தனைக்கும் செந்தில் நாதன் தொகுதிக்குப் புதியவர்தான். கோபால் உள்ளூர்க்காரர்ங்கிறதால அவருக்கு சீட் கேட்டோம்.

துரை வைகோ பேசிய வார்த்தைகள் காயப்படுத்திகிட்டே இருந்ததால் தேர்தல் முடிஞ்சதுமே கோபால் உட்பட 75 நிர்வாகிகள் மொத்தமா கட்சிப் பொறுப்புகளை ராஜினாமா செய்துட்டோம்.
கட்சிப் பொறுப்புகளைத்தான் ராஜினாமா செய்திருக்கோம். கட்சியில இருந்து விலகலை. அடிப்படை உறுப்பினரா ஆயுள் இருக்கும் வரை மதிமுகவில் பயணிப்போம்.
பெரியாரை உயர்த்திப்பிடிக்கிற ஒரு கட்சி. சுயமரியாதை பத்தி அவ்வளவு பேசறோம். அங்க இருக்கிற நிர்வாகிகளுக்கு அதுவும் ஈரோட்டுக்காரங்களுக்கு சுயமரியாதைக்குப் பங்கம் வர்ற போது என்ன செய்யறது?
பொதுச் செயலாளருக்கும் முறைப்படி தெரிவிச்சுட்டு விலகிட்டோம்.
பிச்சை, சாட்டை எடுத்து அடிப்பேன் என்பன போன்ற வார்த்தைகளெல்லாம் கார்ப்பரேட் கம்பெனியை நினைவு படுத்தற மாதிரி இருக்கு. அதனால இனி நிர்வாகியா கட்சியில மனமுவந்து செயல்பட முடியுமா தெரியலை. அதனால சாதாரண தொண்டர்களா இருந்துட்டுப் போறதுனு முடிவு செய்திருக்கோம்’ என்கிறார் இவர்.




