அதிமுக கூட்டணியில் அமமுக சார்பில் மன்னார்குடியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் எஸ்.காமராஜ். இவர் தமிழக அரசியலில் நேற்று பேசுபொருளாக இருந்தார்.
எங்க கட்சி எம்.எல்.ஏ எஸ்.காமராஜை காணவில்லை என ஆளுநரிடம் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் புகார் அளிக்க அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அடுத்த சில மணி நேரங்களில் காணவில்லை என சொல்லப்பட்ட எஸ்.காமராஜுடன் மீண்டும் ஆளுநர் மாளிகை வந்தார் தினகரன்.
எஸ்.காமராஜ் ஆதரவளித்திருப்பதாக தவெக போலி கடிதம் கொடுத்திருப்பதாக கூறினார். அமமுகவுக்கு ஒரே ஒரு எம்.எல்.ஏ இருப்பதால் கட்சி தாவல் தடை சட்டம் வராது என குயுக்தியாக யோசித்து போலி கடிதம் தயாரித்து கொடுத்துள்ளதாக குற்றம் சாட்டினர். இதைத்தொடர்ந்து, எஸ்.காமராஜ், தன் சுயநினைவுடன் தவெக-வுக்கு ஆதரவு கடிதம் எழுதும் வீடியோ வெளியானதுடன், தினகரன் பொய்யான குற்றச்சாட்டு சொல்வதாக தவெக தரப்பில் தெரிவித்தனர். இந்த சம்வங்களால் தமிழகத்தை தாண்டி பேசப்படும் நபரானார் எஸ்.காமராஜ். குறிப்பாக மன்னார்குடி தொகுதிக்குள் பலரும் இதனை விவாதிக்க இரவின் அமைதியை கடந்தும் இந்த விவகாரம் பரபரத்தது.
இதுகுறித்து மன்னார்குடி அமமுக வட்டாரத்தை சேர்ந்த சிலரிடம் பேசினோம், எஸ்.காமராஜை வெற்றி பெற வைக்க டி.டி.வி.தினகரன் பெரும் செலவு செய்தார். பாண்டிச்சேரியில் அதிமுக எம்.எல்.ஏக்களுடன் அவரும் இருந்தார். எடப்பாடி பழனிசாமி, எம்.எல்.ஏக்களை சந்தித்து பேசிய போது, தினகரனிடம் சொன்னதும் உங்களை உடனே அனுப்பி விட்டார் என்றும், தன்னை முன் வரிசையில் உட்கார வைத்தார் என்றும் போனில் மன்னார்குடியில் இருந்த நிர்வாகிகள் சிலரிடம் எஸ்.காமராஜ் சொல்லியிருக்கிறார்.

எல்லோருடைய செல்போனையும் எடப்பாடி பழனிசாமி சுவிட்ச் ஆப் செய்ய சொன்னார். ஆனால் என்னை ஆப் செய்ய வேண்டாம்னு சொல்லிட்டார். திமுக ஆதரவு தர இருக்கிறது. அதிமுக ஆட்சி அமைக்கிறது நீங்கள் அமைச்சர்களாக பதவியேற்பீர்கள் என எடப்பாடி பழனிசாமி சொன்னதாகவும் சொல்லியிருக்கிறார். நேற்று மதியம் வரை அமமுக நிர்வாகிகளிடம் போனில் பேசியுள்ளார். ஆனால் அதன் பிறகு ரிசார்டில் இருந்து வெளியே சென்றவரின் செல்போன் சுவிட்ச் ஆப் ஆகிவிட்டது. அதன் பிறகு நடந்த அனைத்தும் எல்லோருக்கும் தெரியும்.
எஸ்.காமராஜ் மீது எங்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே ஒரு சந்தேகம் இருந்தது. அவருக்கு இருக்கும் இமேஜ்படி அவர் நடந்து கொள்ளமாட்டார். தேர்தல் சமயத்தில் கூட அவரது நடவடிக்கை எங்களுக்கு பிடிக்காமல் மனப்புழுக்கம் ஏற்பட்டது. இதனால் எஸ்.காமராஜ் மீதான சந்தேகம் அதிகமாகவே இருந்தது. நாங்கள் நினைத்தது போலவே நடந்து விட்டது. தினகரன் அவரை நம்பியதால்தான் கட்டுப்படுத்தாமல் சுதந்திரமாக விட்டிருந்தார். கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக-வுக்கு ஆதரவு அளித்ததும் அவர் மாறிவிட்டார். இதையடுத்து என்ன நடந்தது என தெரியவில்லை மீண்டும் தினகரனுடன் வந்து விட்டார் என்றாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றனர்.




