அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்றிரவு 9 மணிக்கு மேல் திடீரென ஆளுநர் மாளிகை வந்து, ‘அமமுக சார்பில் வென்ற காமராஜ் தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக போலி கடிதம் கொடுக்கப்பட்டிருக்கிறது. என்னுடைய எம்.எல்.ஏ வை இப்போது காணவில்லை. தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது’ என கடும் குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். பின்னர் திடீரென நள்ளிரவில் காணாமல் போனதாக சொன்ன அந்த எம்.எல்.ஏ காமராஜுடன் டிடிவி ஆளுநரை சந்திக்க வந்து பரபரப்பை கிளப்பினார்.
எம்.எல்.ஏ காமராஜூடன் ஆளுநரை சந்தித்துவிட்டு வந்த டிடிவி தினகரன், ‘காமராஜ் பாண்டிச்சேரி ரெசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்களோடு தங்கியிருந்தார். அங்கு ‘எடப்பாடி ஆட்சி அமைய’ ஆதரவு தெரிவித்து கடிதத்தில் கையெழுத்திவிட்டு என்னை சந்திக்க புறப்பட்டிருக்கிறார்.
இந்த சமயத்தில்தான் காமராஜின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக விஜய் ஆளுநரிடம் கடிதம் கொடுத்த செய்த தெரிய வந்து அதிர்ச்சியடைந்திருக்கிறார். யாரோ திருட்டுத்தனமாக ஒரு கடிதத்தை தயார் செய்து வாட்ஸ் அப் வழியாக அனுப்பியிருக்கிறார்கள். தவெகவுக்கு 108 எம்.எல்.ஏக்கள் ஆதரவு மட்டுமே இருக்கிறது. அதனால் அவர்கள் குதிரை பேரத்தில் ஈடுபடுகிறார்கள். அமமுகவுக்கு ஒரே ஒரு எம்.எல்.ஏ இருக்கிறார், எனவே கட்சித்தாவல் தடை சட்டம் வராது என குயுக்தியாக யோசித்து தவெகவினர் போலிக் கடிதத்தை தயார் செய்திருக்கின்றனர்.

ஆளுநர் அலுவலகத்திலிருந்து கடிதத்தின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய அழைத்ததால் எங்களுக்கு நடந்ததெல்லாம் தெரியவந்தது.
தூயசக்தி செய்கிற வேலையா இது? ஆட்சி அமைப்பதற்குள்ளேயே இவ்வளவு மோசடிகளை செய்கிறார்கள். காங்கிரஸ் ஒரு டுபாக்கூர் பார்ட்டி. சிபிஐ, சிபிஎம் திமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்து விட்டு, இப்போது தவெகவுக்கு வெளியிலிருந்து ஆதரவு என்கிறீர்களே, உங்களுக்கு நியாய தர்மம் இல்லையா?
தவெகவுக்கு ஆதரவு கொடுத்த எம்.எல்.ஏக்கள் அத்தனை பேரின் நம்பகத்தன்மையையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்’ என்றார்.
விஜய் மீதான டிடிவி தினகரனின் புகாரால் தவெக ஆட்சியமைப்பதில் தொடர் சிக்கல் நிலவி வருகிறது.




