`அதிமுகவின் ஆதரவை தமிழக வெற்றிக் கழகம் பெற்றால், தவெக-வுக்கு நாங்கள் அளித்துள்ள ஆதரவு முடிவை மறுபரிசீலனை செய்ய நேரிடும்’ என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்திருக்கிறது. திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த சிபிஎம் சண்முகம், “மீண்டும் ஒரு தேர்தலை மக்கள் மீது திணிக்கக் கூடாது என்பதற்காகவும், கொல்லைப்புற வழியாக பா.ஜ.க-வின் ஆளுநர் ஆட்சி தமிழகத்தில் அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவுமே தவெக-வுக்கு ஆதரவளித்தோம். தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதால், வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவை வழங்கினோம்.
நல்லாட்சி தருவேன் என்று கூறிய த.வெ.க, அ.தி.மு.க-வை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்வது மக்கள் தீர்ப்புக்கு எதிரானதாக அமைந்துவிடும். மக்கள் தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளுக்கும் எதிராகத்தான் தவெக-வுக்கு வாக்களித்துள்ளனர். எனவே, அ.தி.மு.க-வின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைப்பது மக்களின் விருப்பத்திற்கு விரோதமானது. தவெக அந்த நிலைக்குச் செல்லாது என நம்புகிறோம். ஒருவேளை மீறி அவர்கள் அ.தி.மு.கவின் ஆதரவைப் பெற்றால், எங்கள் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும்.
வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் அடையாளம் காணப்பட்டு 717 மதுபானக் கடைகள் மூடப்பட்டிருப்பதை சிபிஎம் வரவேற்கிறது. இதேபோல், பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் ரயில் நிலையங்களுக்கு அருகில் உள்ள மதுபானக் கடைகளையும் உடனடியாக மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடைகள் மூடப்பட்டதால் வேலை இழந்த ஊழியர்கள் அனைவருக்கும் அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப, பிற அரசுத் துறைகளில் உடனடியாக மாற்றுப் பணி வழங்க வேண்டும்.” எனத் தெரிவித்திருக்கிறார்.




