அதிமுகவை வெளியில் இருந்து ஆதரித்து எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கும் திட்டத்துக்கு தங்களையும் ஆதரவு தெரிவிக்குமாறு திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அகில இந்திய பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி உண்மையை போட்டுடைத்துள்ளார்.
இந்தியா டுடே சேனலுக்கு பேட்டி அளித்திருக்கும் பேபி, ‘காங்கிரசைப் போல் அல்லாமல் திமுக தலைவர் ஸ்டாலினுடன் கலந்தாலோசித்த பிறகே எங்கள் முடிவை அறிவித்தோம். அவர்கள் தங்களோடு இணைந்து அதிமுகவிற்கு வெளியிலிருந்து ஆட்சியமைக்க ஆதரவு அளிக்குமாறு எங்களைக் கேட்டுக்கொண்டனர். பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் இருந்ததால் இதனை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
மக்கள் தேர்ந்தெடுத்திருக்கும் தனிப்பெரும் கட்சி ஆட்சியில் அமர வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம். ஆனால், பாஜகவும் ஆர்.எஸ்.எஸூம் அதற்கு மாறாக நினைக்கிறது. எங்களின் மாநிலச் செயலாளர் ஸ்டாலினை சந்தித்து அவர்களின் ஆலோசனை குறித்து பேசினார். ‘நாங்கள் திமுகவை எதிர்க்கப் போவதில்லை. ஆனால், என்.டி.ஏ கூட்டணியில் அங்கம் வகித்த அதிமுகவை ஆதரிக்கும் அரசியல் முடிவை எங்களால் எடுக்க முடியாது’ என அவர் ஸ்டாலினிடம் கூறிவிட்டார்’ என பேபி பேசியிருக்கிறார்.

திரை மறைவில் இப்படியான முயற்சிகள் நடந்துகொண்டிருக்க, திமுக தலைவர் ஸ்டாலின் ‘ஜனநாயக மாண்புகளை காக்கும் வகையில் புதிய அரசை ஆளுநர் ஆட்சியமைக்க அழைக்க வேண்டும்’ எனக் கூறியதை தமிழக மக்கள் அதிர்ச்சியோடு பார்க்கின்றனர்.




